சென்னை, பிப்.3- சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை 2 ஆவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகின்றன. வண்ணாரப்பேட்டை - விம்கோநகர் இடையே விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் மாத வரம் - சிப்காட், மாதவரம்- சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்த திட்ட மிட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.85 ஆயிரத்து 47 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலை விற்கு நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான மண் பரிசோதனை பணிகள் 80 விழுக்காடு முடிந்துவிட்டன. இந்த பணிகள் முடிந்த பிறகு 2 ஆவது கட்டமாக மாதவரம்- சிறுசேரிக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- மாதவரம் - தரமணி இடையே உள்ள 21 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடத்துக்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் நாட்டின் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு விரைவில் கொண்டு வரப்படுகின்றன. இந்த எந்திரங்கள் மூலம் 21 கி.மீ. தொலைவுக்கு சுரங்க வழித்தடம் அமைக்கப்படும். இந்த எந்திரங்கள் சுமார் 800 முதல் 900 டன் எடையும் 80 முதல் 90 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த எந்திரம் ஒன்று செங்குத்தாக நின்றால் அது 25 மாடி கொண்ட கட்டிடம் போல இருக்கும்.இந்த எந்திரங்கள் மூலம் ஒரு நாளைக்கு 5 மீட்டர் வரை தோண்டப்படும். மண்ணின் நிலைமை சவாலானதாக இருந்தால் சுரங்கம் தோண்டும் பணியின் வேகம் குறைய வாய்ப்பு உள்ளது. 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்க வழித்தட பணிகளை விரைவில் முடிக்க அதிக சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் 21 கி.மீ. வழித்தட பாதையில் பல்வேறு இடங்களில் சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் நிறுத்தப்பட்டு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும். இந்த பணி 2 ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.