விழுப்புரம், டிச.5-
வி.சாத்தனூர் கிராமத்தில், மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பட்டிய லினத்தை சேர்ந்த இருவர் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி உதவி வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட வி.சாத்தனூர் கிராமத்தில், பெஞ்சால் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி குப்பன் மனைவி தனபாக்கி யம், மாயவன் மனைவி தனலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை(டிச.4) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் ப.சண்முகம், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் அக்குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பிறகு, அந்த குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், ஏ.சங்கரன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, வட்டச் செயலாளர் கிருஷ்ணராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.