tamilnadu

img

இரட்டை இலை சின்னம் யாருக்கு ? தேர்தல் ஆணையம் பதில்

அதிமுகவின் இரு அணிகளில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அதனை இடைத்தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவு செய்வார் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் இரு அணிகளாக செயல்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒரு வேட்பாளரையும்,  ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான  அணி மற்றொரு வேட்பாளரையும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில்  இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 நாளுக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம், இரட்டை சின்னம் குறித்து எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது இடைத்தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுக்கு உட்பட்டது. ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று  அதிமுக விவகாரத்தில்  எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவிற்கு தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்திருக்கிறது.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் இதனை பயன்படுத்தி அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.