காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக. 22ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
காஞ்சிபுரம், ஆக.19- காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளியன்று (ஆக.22) காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். ஒன்றிய, மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தனி தேசிய விவசாய அடையாள எண் வழங்கும் பொருட்டு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை களப்பணியாளர்களை தொடர்பு கொண்டு விவசாயிகள் ஆதார், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கம்ப்யூட்டர் சிட்டா கொண்டு சென்று பதிவு செய்ய கொள்ளலாம். நுண்ணீர் பாசனம் திட்டத்தில் பயன்பெற சிறு, குறு விவசாயிகள் 100 விழுக்காடும், இதர விவசாயிகள் 75 விழுக்காடும் மானியம் வழங்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய சிட்டா, ஆதார் அட்டை, நீர் பரிசோதனை அறிக்கை, நில வரைபடம், அடங்கல், விவசாயி புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.