சென்னை;
தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் பொதுமக்களிடமிருந்து அரசு நிர்ணயித்த சேவைக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் நேர்வில் அந்த தனியார் இ-சேவை மையங்களின் பயனர் குறியீடு எவ்வித முன் அறிவுப்பும் இன்றி உடனடியாக முடக்கம் செய்யப்படும். இந்நிறுவனத்தின் அரசு இ-சேவை மையங்களிலும், இந்நிறுவனத்தின் உரிமம்பெற்ற தனியார் இ-சேவை மையங்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாகப் புகார் தெரிவிக்க வேண்டுமென்றால், பொதுமக்கள் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911-க்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.