மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் பேசியதாவது:
வயநாட்டின் கிராமங்களும் குடியிருப்புகளும் துடைத்தெறியப்பட்டுள்ளன. மிகப்பெரிய அளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏராளமானவர்கள் உயிர்ப்பலியாகியுள்ளனர். இறந்தோரின் சரியான எண்ணிக்கை இன்னமும் தெரியவில்லை. இது அரசியல் ஆதாயம் தேடுவதற்கான நேரம் அல்ல. மக்களை மீட்டு, அவர்களின் மறுவாழ்வை அமைத்துத் தருவதற்கான நேரமாகும். எனவே, அனைவரும் இணைந்து மீட்பு மற்றும் மறுவாழ்வு அமைத்துத்தர பாடுபடுவோம். கேரள மாநில அரசாங்கம், மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிக்காக அனைத்து ஏஜன்சிகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
மனிதாபிமான அரசியல் சிந்தனை இல்லாநிலை
இதிலும் அரசியல் ஆதாயம் தேடக்கூடிய விதத்தில் இந்த அவையில் ஓர் உறுப்பினர் அறிக்கை தாக்கல் செய்திருப்பதன் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருக்கின்றன. மக்களைக் காப்பாற்றும் பணியில் ஒட்டுமொத்த தேசமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் ஒரு நபரோ அல்லது ஒரு கட்சியோ அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால் அதன் பொருள், அவர்களிடம் மனிதாபிமான அரசியல் பற்றிய சிந்தனை இல்லை என்பதேயாகும்.
இந்தப் பேரிடர், கேரள மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநில அரசாங்கத்திற்கு சிறப்பு உதவி அளிக்க வேண்டியது அவசியமாகும். கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்திற்கு ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து பெரிய அளவிற்கு ஆதரவு தேவை. எனவே, ஒன்றிய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு சிறப்பு தொகுப்பு அளித்திட வேண்டும். வயநாடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த தேசத்திலிருந்தும் உதவியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். முண்டக்கை கிராமம், சூரல்மலை மற்றும் பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநிலத்தில் மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாகும். எனவே, இதனை ‘தேசியப் பேரிடர்’ என்று ஒன்றிய அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காலநிலை மாற்றத்தால் அழிவுகள் அதிகரிப்பு
மேலும் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பாக சிறப்பு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் ஒன்றிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். புவிவெப்பமயமாகி காலநிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதுதான் நாடு முழுவதும் நிலச்சரிவு களும் இதர பேரழிவுகளும் அதிகரித்துக்கொண்டிருப்ப தற்குக் காரணங்களாகும். எனவே, இந்த விஷயத்தில் ஒன்றிய அரசாங்கத்தின் தலையீடு மிகவும் அவசியமாகும் என்று டாக்டர் வி.சிவதாசன் கூறினார்.