மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிக்கும் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் அராஜகப்போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகள், பொதுநல அமைப்புகள் ஆகியவை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா போன்ற இயக்கங்களை நடத்த காவல்துறையின் அனுமதி கோரினால் காவல்துறை அனுமதி வழங்குவதில்லை, அப்படியே வழங்கினாலும் கடைசி நேரத்தில் அனுமதி ரத்து செய்யப்படுகிறது. அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற ஜனநாயக உரிமைப்படி இயக்கங்கள் நடத்துவதற்கு கடைசி வரை இழுத்தடிப்பு செய்வதும், அனுமதி மறுப்பதும் மீறி நடத்தினால் கைது செய்வது, வழக்கு பதிவு செய்வது போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் தமிழக காவல்துறையின் ஜனநாயக விரோத போக்கிற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
சமீபத்தில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி, பல அமைப்புகளின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை மறுத்துவிட்டு, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 1800க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அதைப்போன்று, சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உரிமைக்கு போராடுகிற பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், ஊழியர்கள் என அனைத்துப் பிரிவினர் மீதும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே,கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து போராடிய 25 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தேச துரோக பிரிவு உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கோடு தமிழக காவல்துறையும், தமிழக அரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஆனால், அதேவேளையில், சமூக விரோத செயல்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதிலும், கைது செய்து தண்டனை பெற்றுத்தருவதிலும் காவல்துறையும் அரசும் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன.
மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிக்கும் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் அராஜகப்போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், ஜனநாயக இயக்கங்களில் ஈடுபட்டோர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிபந்தனையுமின்றி திரும்பப்பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறது.
எனவே, அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கும் காவல்துறையின் இத்தகைய போக்கை மாற்றிக்கொண்டு, ஜனநாயக ரீதியில் நடைபெறும் இயக்கங்களுக்கு அனுமதி வழங்க அறிவுறுத்த வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.