சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தேச விடுதலைப் போராட்டத்தில் உத்வேகத்தோடு பங்கேற்றவர், கடலூரில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் தியாகி அஞ்சலை அம்மாள். மகாத்மா காந்திஅவர்கள் “தென்னாட்டு ஜான்சி ராணி” என்று பெயரிட்டு அழைத்த பெருமைக்குரியவர் தியாகி அஞ்சலை அம்மாள்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எட்டு முறை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட தியாகி அஞ்சலை அம்மாள், நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். 1931 ஆம் ஆண்டில் ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலை அம்மாள் பரோலில் வெளியில் வந்து பெற்றெடுத்த ஆண் மகன்தான் ஜெயவீரன் ஆவார்.சிறையில் இருந்த வந்தவுடன் பிறந்ததால் இவருக்கு “ஜெயில் வீரன்” என்று பெயர் சூட்டினார். அதன் பின் பதினைந்து நாள் கைக்குழந்தையுடன் சிறைக்குச் சென்று எஞ்சிய இரண்டு மாத தண்டனையை அனுபவித்தார்.1933 ஆம் ஆண்டில் அந்நியத் துணி எதிர்ப்புப்போராட்டத்தின் போது அஞ்சலை அம்மாளுக்கு மூன்று மாத தண்டனை விதிக்கப்பட்டது.அப் போது, கைக்குழந்தையாக இருந்த ஜெயவீரனுடன் தான் வேலூர் சிறைக்குச் சென்றார். சிறு பருவத் திலேயே இரு முறை சிறை சென்ற ஜெயவீரன் பின்னாளில் தியாகிகள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி, ஜெயவீரனுக்கு தியாகிகள் உதவித்தொகையும் கூட மறுக்கப்பட்டது.இத்தகைய இன்னல்களையும், சொல்லொண்ணா துன்பங்களையும் எதிர் கொண்டாலும், நாட்டின் விடுதலைக்காக அவற்றை இன்முகத்தோடு எதிர் கொண்ட தியாகி அஞ்சலை அம்மாளின் புதல்வன் ஜெயவீரனின் மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். ஜெயவீரன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்தார்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.