tamilnadu

img

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைத்திடுக

கடலூர் சட்டமன்றத் தொகுதியில்  புதிய பேருந்து நிலையம் அமைத்திடுக

குடியிருப்போர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூன் 19 - கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குள் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரி குடியிருப்போர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.  கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் குண்டு உப்பலா வாடியில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் பாலு.பச்சையப்பன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், குடியிருப்போர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ரங்கநாதன், நடராஜன், கண்ணன், தனுசு, கோபால், பிரசாத், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொதுச்செயலாளர் பி.வெங்கடேசன் உரையாற்றினர். கடலூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலன் கருதி பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்றும், அரசும் கடலூர் மாநகராட்சியும் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குள் பேருந்து நிலையம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 22 சனிக்கிழமை காலை மஞ்சக்குப்பத்தில் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில் உப்பலவாடி ஊராட்சியில் உள்ள அனைத்து நகர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கடலூர் சட்டமன்ற தொகுதியில் புதிய பேருந்து நிலையம் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். அழகப்பா நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகி வரதராஜன் நன்றி கூறினார்.