tamilnadu

img

விதொச திருவாரூர் மாவட்டத் தலைவர் தோழர் ஆர். குமாரராஜா மறைவு கட்சிக்கு பேரிழப்பு சிபிஐ(எம்) மாநில செயற்குழு இரங்கல்

சென்னை, செப். 18 -வி.தொ.ச. திருவாரூர் மாவட்டத் தலைவர் தோழர்  ஆர். குமாரராஜா மறைவுக்கு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவருமான தோழர் ஆர். குமாரராஜா (வயது 45) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில்  இருந்த நிலையில், புதனன்று (18.09.2024) அவர்  உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. 

அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் குமாரராஜா திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை திரட்டி அவர்களின் நலன்களுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். கட்சியின் முழுநேர ஊழியராகவும் திறம்பட பணியாற்றியவர். அவரது மறைவு கட்சிக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

குமாரராஜாவின் மனைவி செங்கொடி, தியாகி தோழர் ஜே.நாவலன் அவர்களின் மகள் ஆவார். செங்கொடி  தற்போது இருள்நீக்கி ஊராட்சி மன்றத் தலைவராக வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

குமாரராஜா மறைவால் துயருற்றிருக்கும் செங்கொடி மற்றும் குழந்தைகளுக்கும், குடும்பத்தின ருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு  அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.