சென்னை:
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவிக்கான நியமனத்தில் பெருமளவில் சட்டமீறல்கள் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவிக்குத் தகுதியானவரை வெளிப்படைத் தன்மையுடன் நியமனம் செய்யவேண்டும் எனத் தமிழக அரசை விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ தேர்வுமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லாமலும், தமக்கு வேண்டிய நபரை அப்பதவியில் அமர்த்த அவசர ஆயத்தங்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுதுள்ளன.அது மட்டுமில்லாமல் முறைகேடான நியமனத்தை எதிர்த்து நீதிமன்றம் மூலம் தடையாணை பெறுவதைத் தவிர்க்கும் வகையில், தந்திரமாக உயர்நீதிமன்றத் தின் விடுமுறை நாட்களில் நியமனம் செய்ய முயற்சிப்பதாகவும் தெரிகிறது” என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
23.12.2020-ல் இருந்து 4.1.2021 வரை விடுமுறை நாட்கள் என்பதால், அதைப் பயன்படுத்தி, மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நியமனத்தை சட்டத்திற்குப் புறம்பாக செய்துவிடலாம் என அதிமுக அரசு திட்டமிடுவதாகக் கருதப்படுகிறது. அத்தகைய சதிமுயற்சிகள் இருப்பின் அதனைக் கைவிட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இந்த தேர்வுக்குழு வெளிப் படைத் தன்மையைக் கருத்தில் கொண்டு, மனித உரிமை ஆணையத் தலைவராகப் பணிபுரிய விருப்பமுள்ள அனைவருக்கும் அதில் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கி, உயர்நீதிமன்றத்தில் மிகச்சிறப்பாக பணிபுரிந்த, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரைப் பரிந்துரை செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.