tamilnadu

img

பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் கவலைக்கிடம்! - முதல்வர் ஸ்டாலின்

பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஊடக சுதந்திரம், பத்திரிகையாளர் பாதுகாப்பு, நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு நலன்களை வலியுறுத்தும் வகையில், ஒவ்வோரு ஆண்டும் மே 3-ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் கூறியதாவது:
“உலகப் பத்திரிகை சுதந்திர தினத்தில், ஒரு கொடும் யதார்த்தத்தை எதிர்கொள்வோம்: பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது. பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் மிக மோசமான இடம், கவுரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோரின் படுகொலைகள்; அதிகாரத்தில் இருப்போரைப் பற்றி உண்மையை எடுத்துரைக்கும் சித்திக் காப்பான், ரானா அய்யுப் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள்ளதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
ஜனநாயகத்தில் ஊடகத்தின் பங்கைப் போற்றும் அதே வேளையில், பேச்சு சுதந்திரத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிக்கவும் பத்திரிகையாளர்கள் அச்சம் மற்றும் கொடுங்கோல் தணிக்கை முறை இன்றிப் பணியாற்றவும் போராட உறுதியற்போம்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.