tamilnadu

img

அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவு - தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்!

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தை தொடர்ந்து அப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி   அறிவியலையும், பகுத்தறிவையும் போதிப்பதற்கு மாறாக, மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேசன் எனும் அமைப்பு சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மகாவிஷ்ணு என்ற நபர், மாணவர்களிடையே முன் ஜென்மம், மறுபிறவி, பாவம், கர்மா என அறிவியலுக்கு மாறான விசயங்களை பேசியிருக்கிறார். அப்போதே ஆசிரியர் ஒருவர் இது அரசுப்பள்ளி, மாணவர்களிடையே ஏன் பாவம், முன் ஜென்மம், மறுபிறவி என்று ஆன்மிகவாதி போல் பேசிகொண்டு இருக்கிறீர்கள் என கேட்டதற்கு, அரசுப்பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாதா? என அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அரசுப்பள்ளியில் இதுபோன்று அறிவியலுக்கு புறம்பான விசயங்களை போதிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அறிவியலுக்கு மாறான கருத்துகளை பேசியிருந்த விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.