tamilnadu

img

பெரம்பூரில் அமைகிறது புதிய ரயில் முனையம்!ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்

சென்னை, ஜூலை25- சென்னை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களிடம் புதனன்று கூறியதாவது: தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், ராமேசுவரம், காட்பாடி ஆகிய ரயில்நிலையங்கள் முற்றிலுமாக சீரமைக்கப்படுகின்றன. எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி இன்னும் 2 ஆண்டுகளில் முடிவடையும் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.6362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு நிதி பெறுவதில் ஒரு பிரச்சினையும் இல்லை.

ஆனால், மாநில அரசிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. புதிய ரயில்வே மேம்பாலங்கள், ரயில்வே சுரங்க பாதைகள் அமைக்க முன்னுரிமை அளித்து வருகிறோம். 40 ரயில்வே மேம்பாலங்களை அமைப்பதில் ரயில்வே துறையின் பணி முடிந்துவிட்டது. ஆனால், தமிழக அரசின் பணிதான் நிலுவையில் உள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி வரும் அக்டோபர் மாதம் முடிவடையும். திண்டிவனம் -நகரி, திருபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, ராமேசுவரம் - தனுஷ்கோடி உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராமேசுவரம் - தனுஷ்கோடி திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்து வதில் பெரியஅளவில் பிரச்சினைகள் உள்ளன. தமிழக அரசிடமிருந்து உரிய ஒத்துழைப்பு கிடைக்காததால்தான் நிறைய ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்களை தொடர்ந்து 4-வது ரயில் முனையம் பெரம்பூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்பணி ஒரு மாதத்தில் முடியும். அதைத்தொடர்ந்து விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி கோரப்படும். நிதி ஒதுக்கப்பட்டால் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பணி முடிந்துவிடும். வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க தேவையான நிலம் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது தயாராகும்?

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரயில் நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அந்த ரயில் நிலையத்தில் 2 புதிய லூப்லைன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்படும் என்று சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் கூறினார்.

பெரம்பூர் ரயில் நிலையம் என்பது தெற்கு ரயில்வே மண்டலத்தின் சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள  முக்கிய மான ரயில் நிலையமாகும். 

சென்னை கடற்கரை  மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய இடங்களுக்கு இந்த ரயில் நிலை யம் வழியாக புறநகர் மின்சார ரயில்கள்இயக்கப்படுகின்றன.  

கொச்சி, திருவனந்தபுரம், மும்பை, பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட முக்கியமான நகரங்களுக்கு இந்த ரயில் நிலையம் வழியாக விரைவு ரயில்கள் செல்கின்றன. 

பெரம்பூர் ரயில் நிலையம் ரயில்வே காலனி,  தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை, பெரம்பூர் கேரேஜ் பணிமனை ஆகியவற்றின் அருகே அமைந்துள்ளது.