tamilnadu

img

‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’-பிரச்சாரம் தொடரும்: ஸ்டாலின்...

சென்னை:
திமுக நடத்திய கிராமசபை கூட்டத்திற்கு எடப்பாடி அரசு தடைவிதித்துள்ளதால் ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

“அதிமுகவை நிராகரிக்கிறோம்”என்ற கிராமசபைக் கூட்டங்களில் மிகப்பெரிய அளவில் மக்களும் கூடுவதைப் பார்த்த முதலமைச்சர் பழனிசாமி அதிர்ச்சியில் மூழ்கி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி “கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக் கூடாது; மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஒரு செய்திக் குறிப்பை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருக்கிறார்.

பயத்தின்வெளிப்பாடு...
மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஊராட்சி மன்றங்களில் அமைக்கப்படும் “கிராமசபை” வேறு!  திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டம் வேறு என்பதைக் கூட இந்த உத்தரவின் பின்னணியில் ஒளிந்து கொண்டிருக்கும் முதலமைச்சரும் உணரவில்லை. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் அறியவில்லை.இது முழுக்க முழுக்க திமுக “கிராமசபை”க் கூட்டம். இது அதிமுக அரசின் தோல்விகளை, அரசு கஜானாவில் அமைச்சர்கள் அடித்த கொள்ளைகளை, மாநில உரிமைகளை அடகு வைத்த முதலமைச்சரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பிரச்சாரக் கூட்டம்.

எதிர்ப்பு அலை...
இது தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் பிரச்சாரக் கூட்டம். ஆனால் “கிராமசபை”க் கூட்டம் துவங்கிய இரு தினங்களிலேயே எடப்பாடி பழனிசாமிக்குக் காய்ச் சல் வந்து விட்டது. கூட்டத்தைப் பார்த்து பதற்றம் அதிகரித்து விட்டது. எந்தப் பக்கம் போனாலும் மாநிலம் முழுவதும் அவருக்கு வீசும் எதிர்ப்பு அலைகள் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. எனவேதான் “சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும்” என்று கற்பனை செய்து கொண்டு திமுகவின் கிராமசபைக் கூட்டத்தைத்  தடுக்கிறார்கள்.

அச்சம்...
அதிமுகவிற்கு தைரியமிருந்தால் போட்டிக் கூட்டம் நடத்தி “நாங்கள் இவ்வளவு சாதித்துள்ளோம்” என்று சாதனையைச் சொல்லலாம். ஆனால் முதலமைச்சரும் அமைச்சர்களும்  ஏற்படுத்தியுள்ள வேதனையால் எந்த கிராமத்திற்குள்ளும் தேர்தல் நேரத்தில் நம்மால் நுழைய முடியாது என்ற முடிவிற்கு வந்து இது போன்ற தடைகளை விதிக்கிறார்கள்.  எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திஅராஜக மனப்பான்மையுடன் திமுக “கிராமசபை” கூட்டத்தைத் தடுக்க முயன்றுள்ளார். இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.திமுக கிராமசபைக் கூட் டத்தை எக்காரணம் கொண்டும் அரசால்  தடுத்து விட முடியாது. பிரச்சாரத்தையும் “வழக்குகளை”க் காட்டி முடக்கி விட முடியாது.  இனி “மக்கள் கிராம சபைக் கூட்டம்” என்ற பெயரில் நடத்தப்படும். கிராமங்கள், வார்டுகளை நோக்கி மக்கள் சந்திப்பும் பிரச்சாரமும்  தொடரும். அதை இந்த முதலமைச்சர் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

;