மத்திய பாஜக அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து கடந்த 28 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலைநகர் டெல்லியில் சமரசமற்ற போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். கோடிக்கணக்கான விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத மோடி அரசின் நடவடிக்கையால் கடும் குளிர் இதுவரை 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து உள்ளனர். விவசாயிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் வீரவணக்கம், அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று மறைந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். இதில் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் வி.பி.இளங்கோவன், வி.ஆர்.பழனிச்சமி, சு.பழனிச்சாமி, பெரியசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக கோவையில் உள்ள சீக்கிய குருத்துவாராவில் இருந்து நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.