tamilnadu

img

மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு

மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு

லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

முருகனின் ஏழாவது படைவீடு என சொல்லப்படும், கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளியன்று வெகு விமர்சையாக குடமுழுக்கு நடைபெற்றது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கிய கும்பாபிஷேக விழா, தினமும் பல்வேறு யாக பூஜைகளுடன் நடைபெற்றது. ஆறாம் கால வேள்விக்குப் பிறகு, திருச்சுற்று தெய்வங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளியன்று குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் அறங்காவலர் குழுவினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.