tamilnadu

img

உலகத் தரத்தில் தோந்நக்கல் வைராலஜி நிறுவனம்..... எதிர்கால சுகாதார பாதுகாப்பில் கேரளத்தின் நவீன பங்களிப்பு...

திருவனந்தபுரம்:
கொரோனா வைரஸ் உலகை உறையவைத்த நிலையில், சுகாதார பாதுகாப்பில் கேரளம் முன்னணியில் உள்ளது. எதிர்காலத்தில் வைரஸ்கள் வெடித்துக் கிளம்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வில் கேரளாவும் ஒரு படி முன்னேறி வருகிறது. கேரளாவின் பெருமையான ‘மேம்பட்ட வைராலஜி நிறுவனம்’ நான்கு வாரங்களுக்குள் செயல்படத் தொடங்கும் என அதன்இயக்குநர் அகில் சி பானர்ஜி தெரி வித்தார்.உலகமே பாராட்டும் வகையில் நிபா வைரஸை கேரள சுகாதாரத்துறை எதிர்கொண்டு நோய் பரவாமல் கட்டுப்படுத்தியது. உலக அளவில் பல்வேறுநாடுகளில் தோன்றும் புதிய நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் கேரளத்தில் வைரஸ்களை கண்டறிவதற் கான நவீன ஆய்வகம் அமைக்க கேரளஅரசு முடிவு செய்தது. 

அதன்படி திருவனந்தபுரத்தில் தோந்நக்கல் எனுமிடத்தில் உள்ள லைப் சயன்ஸ் பார்க்கில் இதற்காக 20 ஆயிரம்சதுர அடியில் ஆய்வகம் அமைக்க 2018மே 30 அன்று முதல்வர் பினராயி விஜயன்அடிக்கல் நாட்டினார். தேசிய வைராலஜிநிறுவனம், மணிப்பால் பல்கலைக்கழ கம், ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ), இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் (ஐசிஎம்ஆர்), உட்பட பல்வேறு நிறுவனங்கள் வெளிநாடுகளை நம்பியிருந்த நிலையில் உலகத் தரத்தில்தோந்நக்கல் வைராலஜி நிறுவனம் செயல்பாட்டை துவக்க உள்ளது.  நோயறிதலுடன் இந்த நிறுவனம் மேம்பட்ட ஆராய்ச்சியைக் கொண்டிருக்கும். ஜப்பான் என்செபாலிடிஸ் முதல் கோவிட் வரையிலான நோய்களை இந்நிறுவனம் ஆய்வு செய்யும். ஆய்வுகள் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்படும். இது வைரஸின் மரபணு மாற்றங்கள், பிறழ்வு எவ்வாறு நிகழ்கிறது, ஆரம்பகால நோயறிதல், வெவ்வேறு நோயாளிகளில் காணப்படும் அறிகுறிகள் மற்றும் ஆன்டிபாடி எதிர்ப்பு பற்றியவிரிவான ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும்.கடுமையான இதர நோய்களால் பாதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகள், முதியோரை கோவிட் எவ்வாறு பாதிக்கிறது?, எந்த வகையான இறப்பு விகிதங்கள் அதிகம் என்பது உட்பட பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படும். கேரளாவில் வைரஸ்களில் உள்ள மரபணு மாற்றங்களும் ஆராயப்படும்.

சோதனைகள் விரைவில்
நோயறிதலுக்கான மையம் விரைவில் தொடங்கப்படுகிறது. இதற்கான கருவிகள் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பெற்று இரண்டு வாரங்களுக்குள் நியமனங்கள் இறுதி செய்யப்படும். இந்த நிறுவனம் நான்குவாரங்களுக்குள் முழுமையாக செயல்படும். ஆரம்ப கட்ட பணிகளை விரைவில் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகளாவிய ஒத்துழைப்பு
அயர்லாந்தைச் சேர்ந்த டாக்டர். வில்லியம் ஹால் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் ஆவார். இந்த நிறுவனம்பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் சேவைகளையும் கொண்டுள் ளது. உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உலகளாவிய வலை (குளோபல் நெட்) அமைப்பின் உதவியுடன் கேரளாவில் கிடைக்கப்பெறும்.தற்போது ஜப்பானில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்துடனும் பால்டிமோர் மனித வைராலஜி நிறுவனம் (இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியுமன் வைராலஜி) ஆகியவற்றின் ஒத்துழைப்பும் உள்ளது. புகழ்பெற்ற அமெரிக்க உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர் ராபர்ட்காலோவின் சேவைகளும் கிடைக்கும்.

கோவிட்டுக்குப் பிந்தைய நோய்கள்
இயற்கையாகவே நோயிலிருந்து குணமடைந்தோர், மருந்துகளின் உதவியுடன் குணமடைந்தோரிடம் காணப்படும் கோவிட்டுக்கு பிந்தைய நோய்கள்ஆய்வு குறித்து இங்கு செய்யப்படும். உடல் உறுப்புகள், நரம்புகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை கோவிட் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படும்.

அரசின் வலுவான ஆதரவு
இந்த நிறுவனத்தை விரைவாக தொடங்க அரசாங்கத்தின் தலைமை மனப்பான்மையே உதவியது. எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தான வைரஸ்களைப் பற்றிய ஆய்வு நடத்த வேண்டும் என்ற நிறுவனத்தின் கோரிக்கைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மிகச்சிறந்த ஆராய்ச்சிகள் நடத்தி வெளியிடுவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான கோவிட் பாதுகாப்பின் பகுதியாக இந்நிறுவனம் விளங்கும்.