கேரளாவில் அன்னாச்சி பழத்திற்குள் வைக்கப்பட்ட வெடிமருந்தால் யானை பரிதாபமான உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமத்திற்குள் உணவு தேடிச் சென்றது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிலர் அன்னாச்சி பழத்திற்குள் வெடி மருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர். பசியில் இருந்த யானை அதனை வாங்கி சாப்பிட்டு சிறிது நேரத்தில் பழம் வெடித்ததால் கடுமையான வலியை அனுபவித்தது. இதில் யானையில் வாய் மற்றும் நாக்கு பகுதி பலத்த காயம் அடைந்தது. வலியால் அலறிய யானை அங்கும் இங்கும் ஓடி ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கும்கிகளின் உதவியுடன் யானையை மீட்டனர். கால் நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சையளித்தனர். ஆனால் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து யானையை பிரேதப்பரிசோதனை செய்த மருத்துவர் ஆப்ரஹாம் டைம்ஸ்நவ்க்கு அளித்த பேட்டியில் நான் இதுவரை 250 யானைகளுக்கு மேல் பிரேத பரிசோதனை செய்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னால் இதை கடந்து செல்ல முடியவில்லை மிகவும் உணர்ச்சி வசப்பட்டவனாக இருந்தேன். நான் கருப்பையிலிருந்த சிசுவைக் கையில் ஏந்தினேன். பிரேத பரிசோதனையை தொடங்கும் போது அது கருவுற்றிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கருப்பையில் சிறிய இதயமும் அதில் அம்நியோடிக் அமிலமும் இருந்தது. அதை வைத்துதான் யானை கர்ப்பமாக இருந்ததை அறிந்தேன் என்று தெரிவித்துள்ளார். அன்னாசிப்பழத்தில் வைக்கப்பட்ட வெடிபொருள் யானை உடலில் சென்று வெடித்ததில் அதன் நுரையீரலும் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் உயிரிழந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடிவருகின்றனர்.