உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா 104 ரன்களும், ராகுல் 77 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கத்தைக் கொடுத்தனர். ரிஷப் பந்த் 48 ரன்களும், தோனி 35 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்து கடினமான இலக்கை நிர்ணயித்தது. வங்கதேச அணியின் தரப்பில் முஷ்டபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 66 ரன்களும், சவ்மியா சர்க்கார் 33 ரன்களும், சப்பிர் ரஹ்மான் 36 ரன்களும் சேர்த்தனர். 48 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி ஆட்டமிழந்தது. முகம்மது சைபுதீன் 51 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பும்ரா 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், 13 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-ஆம் இடத்தை பிடித்து, உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.