மரணத்தை எதிர்நோக்கியுள்ள புற்றுநோயாளிகளை பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சீழ் ஒழுகும், புழு நெளியும் உடலை தொட்டு சுத்தம் செய்வதோ, தசை அழுகி தூர்நாற்றம் வீசும் நோயாளியை வீட்டில் வைத்திருப்பதோ எளிதானா காரியமா? அத்தகைய நோயாளிகளுக்கு சரணாலயமாக உள்ளது ‘அபயம்’.
வலியில் துடித்தபடி வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் புற்றுநோயாளியை அன்போடு அழைத்துச் சென்று, அழுகிய தசைகளை அறுத்தெறிந்து, புழுக்களை நீக்கி, மருந்திட்டு, விரும்பும் உணவு கொடுத்து, கேட்பதையெல்லாம் கொடுத்து மகிழ்ச்சிபடுத்தி, வலியை குறைப்பது எத்தகைய சவாலான காரியம்? அதனை உவப்போடு செய்கிறது ‘அபயம்’. அதென்ன அபயம்? புற்றுநோயின் கடைசிகட்டத்தில் ஏற்படும் இயலாமையால், வெறுப்பால், வலியால் வசைமாரி பொழிவார்கள். இன்றுள்ள பொருளாதார நிலையில் அத்தகையோரை கூடவே இருந்து ஒருவர் பாராமரிப்பது, பாதுகாப்பது எளிய, நடுத்தர குடும்பங்களால் சாத்தியமில்லை. அத்தகையோரை பராமரிக்கும் அர்ப்பணிப்பு மிக்க பணியை ‘அபயம்’ செய்கிறது. அபயத்திற்கு மலையாளத்தில் ஆதரவற்றோர் புகலிடம் என்று பொருள்.
சென்னை புழலை அடுத்துள்ள சிறுனியம் கிராமத்தில் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ‘அபயம்’ காப்பகத்தை சென்னை பெய்ன் அண்டு பாலியேடிவ் கேர் என்ற அமைப்பு நடத்துகிறது. இந்த நவீன மையத்தை 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். கட்டணமின்றி செயல்படும் இம்மையத்தில் 3 மருத்துவர்கள், 6 செவிலியர்கள் என 11 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். சென்னை பெய்ன் அண்டு பாலியேடிவ் கேர் அமைப்பில் 56 தன்னார்வலர்கள் உள்ளனர். முதுமை அல்லது ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக, பராமரிப்பின்றி கிடப்பவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால், தன்னார்வலர்கள் உடனடியாக அந்த வீட்டிற்கே சென்று, நோயாளிகளை சுத்தம் செய்து, ஆலோசனை தருவது, தேவையான மருந்து, உபகரணங்களை வழங்குவது போன்றவற்றை செய்கின்றனர். மாதந்தோறும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை தொடர்கின்றனர்.
புற்றுநோய் பாதித்து மரணத்தை எதிர்நோக்கி இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களை சொந்த ஆம்புலன் மூலம் ‘அபயம்’ மையத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு வைத்து அவர்களை பராமரிக்கின்றனர். நோயாளிகளின் வலியை குறைக்க மருந்துகளை தருகின்றனர். அவர்கள் விரும்பும் உணவு, உடை உள்ளிட்டவைகளை கொடுத்து, மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்கின்றனர். வலி குறைந்து வீட்டிற்கு செல்ல விரும்புகிறவர்களை அனுப்பி வைக்கின்றனர். இவை எதற்கும் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“புற்றுநோயின் கடைசி கட்டத்தில்தான் மையத்திற்கு வருகிறார்கள். அவர்களை குணப்படுத்த முடியாது. ஆனால் அவர்களின் வலி, வேதனையை குறைக்க மருந்து கொடுக்கிறோம். மகிழ்ச்சிப்படுத்தி வலியை மறக்கடிக்கிறோம். இறுதிக்காலம் இன்பமாக இருக்க தேவையான அனைத்தையும் செய்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 119 புற்றுநோயாளிகள் வந்தனர். அவர்களில் 55 பேர் இறந்துள்ளனர். உடலை வாங்க கூட சில நேரங்களில் உறவினர்கள் வருவதில்லை. அவர்களையும் அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்து விடுகிறோம்.
வயது முதிர்ந்தவர்கள் மட்டுமல்ல எந்த வயதில் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் இருந்தாலும் அவர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று ஆம்புலன்சில் கொண்டு வந்து பராமரிக்கிறோம். ஒருசிலர் வலி குறைந்த பின் வீட்டிற்கு செல்ல விரும்பினால் அனுப்பி வைக்கிறோம். அதேசமயம் அவர்களை எங்களது தன்னார்வலர்கள் கண்காணித்து தொடர் சிகிச்சை அளிக்கின்றனர். 40 படுக்கை கொண்ட அபயத்தில் தற்போது 12 பேர் உள்ளனர்” என்கிறார் பாலியேடிவ் அமைப்பின் செயலாளர் பிரகாஷ் புத்தன் வீட்டேல். “சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாலியேடிவ் கேர் வாயிலாக வயது முதிர்ந்த 400க்கும் மேற்பட்டோர் பயனடைகின்றனர். தன்னார்வலர்கள் நோயாளிகளின் வீட்டிற்கே சென்றும் சிகிச்சை அளிப்பதோடு, அவர்களுக்கு தேவையான வீல்சேர், வாக்கர், மெத்தை, மருந்து, உணவு பெட்டகம் போன்றவற்றை வழங்குகின்றனர். இவற்றையெல்லாம் ஓரளவு நன்கொடை கிடைப்பதன் மூலமே செய்கிறோம். இந்த பணிகளை தொடர மாதம் 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஊடக வெளிச்சமும், நன்கொடைகளும் கிடைத்தால்தான் இந்த பணிகளை சிறப்பாக செய்ய முடியும் என்றும் பிரகாஷ் புத்தன் வீட்டேல் கூறினார்.
கூடுதல் விவரங்களுக்கு பிரகாஷ் புத்தன் வீட்டேல்,9841855787, 9080609313 www.chennaipainandpalliativecare.org, mail2cppc@gmail.com