மாணவர், வாலிபர் சங்கங்கள் வலியுறுத்தல்
சென்னை,மே 13- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவசர கதியில் பொதுத் தேர்வு நடத்துவதை கைவிட்டு கொரோனா அச்சத்தை போக்கி தேர்வை நடத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கமும் வாலிபர் சங்கமும் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி கண்ணன், மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் இருவரும் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-
தமிழகத்தில் ஆண்டு தோறும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவர்கள் வரை எழுதி வருகின்றனர். இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசு கல்வி நிலையங்க ளுக்கு விடுமுறை அளித்தும், மார்ச் 24 ஆம் முதல் மே 17 வரை ஊரடங்கும் அறிவித்துள்ளது. இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை நடக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
எப்போதும் பள்ளிக்கல்வித் துறையில் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து அமைச்சர் அதை நிராகரித்து ஒரு அறிவிப்பு வெளியிடுவார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த குழப்பம் நடந்து வருகிறது. இந்நிலையில், அரசின் தேர்வு அறிவிப்பு மிகப் பெரிய அச்சத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏற்கனவே கொரோனா தொற்றால் மிகப்பெரிய அச்சத்தோடும், தேர்வு குறித்த பயத்தோடும், மன அழுத்தத்தில், மாணவர் கள் உள்ள சூழலில் தேர்வை அறிவித்திருப்பது மாணவர் கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலாகவே கருதுகிறோம்.
ஆகவே, நோய் பயம் போக்கி, கால அவகாசம் கொடுத்து தேர்வு நடத்த வேண்டும். மேலும் ஏற்கனவே கல்வி நிலையங் களை கொரோனா மீட்பு பணிக்கு பயன்படுத்துவதால், தேர்வுக்கு முன்பாக அனைத்து கட்டிடங்களையும் சுத்தம் செய்து நோய் தொற்று பரவாதவண்னம் தூய்மைப்படுத்த வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத ஒவ்வொரு பள்ளியிலும் குவியும் போது நோய் தொற்று பரவ அதிகமாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்தை மே 31 வரை இயக்கக்கூடது என பிரதமரிடம் முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தி சொல்லிவிட்டு ஜூன் 1 ஆம் தேதி பொதுத்தேர்வு என்றால் வெளியூரில் இருந்து மாணவர்கள் எப்படி தேர்வுக்கு வரமுடியும். மேலும், சாதாரண காலத்திலே போதுமான பேருந்துகளை மாணவர்களுக்கு அரசு இயக்காது. அப்படியிருக்கும் போது தற்போது 50 விழுக்காடு பயணிகளோடு பேருந்து இயக்கினால் எப்படி மாணவர்களால் பள்ளிக்கு வரமுடியும்.
ஆகவே கூடுதலான பேருந்துகளையும், தேர்வு மையங்களையும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு பல்வேறு வகையான நடைமுறை பிரச்சனைகளை, அடிப்படைத் தேவைகளை சரிசெய்யாமல் தேர்வை நடத்துவது, கொரோனா நோய் தொற்றை அதிகப்படுத்தவும், மாணவர்களை வஞ்சிக்கவே பயன்படும். ஆகவே நோய் பற்றிய, அச்சத்தை போக்கி, தேர்வு எழுதுவதற்கான மனநிலையை உருவாக்குவதோடு பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து நடைமுறை சிக்கல்களையும் அரசு சரி செய்த பின்பே தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
வாலிபர் சங்கம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கினால் பொது மக்களும் மாணவர்களும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தேர்வு அறிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் இயக்கம் கோரிக்கை
கொரோனா தொற்று அதிகரித்து வரும் போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது பொருத்தமாக இருக்காது என்பதால் ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணி தமிழக அரசு பள்ளி கல்வி துறைக்கும் தமிழக முதல்வருக்கும் அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து பள்ளிகள் திடீரென்று மூடப்பட்டது. ஊரடங்கு மற்றும் பொது முடக்கு காரணமாக மக்கள் சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்து வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். உணவு, வேலை இல்லாமல் பெரும் துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர்.
பல்கலைக்கழக மானியக் குழு கூட மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்வேறு சலுகைகளோடு தேர்வுகளை நடத்த ஓர் வழிகாட்டு நெறிமுறை களை வழங்கியுள்ளது. அதில் அகமதிப்பீட்டு முறையை 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு கணக்கில் கொள்ளலாம். மீதம் உள்ள 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு முந்தைய பருவத் தேர்வு உட்பட பல வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மேலும் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இத்தகைய தேர்வுகளை நடத்த ஜூலை மாதத்தையே அது பரிந்துரை செய்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று தொடர்ந்து ஏறு முகமாக இருக்கும் இந்த நேரத்தில் பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களிலும் தேர்வுகள் பற்றிய திட்டமிடுதல் இல்லை. மத்திய தேர்வு வாரியம் கூட இன்னும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் பற்றி அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு முந்திக் கொண்டு தேர்வுகளை அறிவிப்பது எந்த இலக்குகளை அடைய மக்களுக்கு கூற தமிழ்நாடு அரசு கடமைப் பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்குதல், அச்சம், பீதி, நிச்சயமற்ற நிலை, பெற்றோர்கள் வருவாய் இழப்பு போன்ற வற்றின் ஊடாக தேர்வுகள் பற்றியே சிந்திக்க முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். இது போன்ற சூழ்நிலையின் காரணமாக செய்வது அறியாது நிற்கும் பெற்றோர் மாணவர் மனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை உடனடி யாக திரும்ப பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு ஓர் நிபுணர் குழு அமைத்து அதன் அடிப்படையில் முடிவு செய்ததைப் போன்று, பள்ளிக் கல்வித் துறை ஓர் நிபுணர்கள் குழு அமைத்து அதன் முடிவுகள்படி பத்தாம் வகுப்பு தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும்.
கோவிட் 19 - க்காக பள்ளி மூடியதிலிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகளில் வழங்கப்படும் தேர்வுக்கான பயிற்சி எதுவும் வழங்கப்பட வில்லை. ஆனால் தனியார் பள்ளிகள் ஆன் லைன் உள்ளிட்ட பிற பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில் அரசு - தனியார் பள்ளி படிப்பில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இது சமத்துவ தேர்வு முறைக்கு எதிரானது.மேலும் பள்ளி மாணவர்களுக்கு கோவிட் 19 குறித்து விழிப்புணர்வு எவ்வளவு தூரம் ஏற்பட்டுள் ளது என்பதும் கேள்விக்குறியே. இச் சூழலில் அவர்கள் பாதுகாப்பு முறைகளைக் கையாளுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
மேலும் சமீபத்திய பிரதமர் , முதலமைச்சர்கள் கலந்துரையாடலில் ரயில், பேருந்து போக்கு வரத்தை மே 31 வரை நிறுத்தி வைக்கும்படி கூறியுள்ளார். அப்படி இருக்கும் போது மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை யும் கணக்கில் கொள்ளாமல் தேர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. மாணவர்களுக்கு உடல் நலப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தேர்வுகளைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.