கரூர், மே 17- கரூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். கரூர் மாவட்டம் கீழமாயனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(53), மாட்டுத் தரகர். இவரது மகள் அருணா(30). அவரதுஒரு மாத கைக்குழந்தை சுஷாந்த், ஒன்னரை வயது ஜோஸ்வின். ஹைதராபாத் மாநிலத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தியின் தம்பி சக்திவேல்(50), தனது குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு செல்ல மகள் அருணா, பேரக்குழந்தைகள் சுஷாந்த், ஜோஸ்வின், மைத்துனரான மாயனூர் அடுத்த மதுக்கரையைச் சேர்ந்த நாகராஜ்(28), சக்திவேல் மகன் கிஷோர்(13) மற்றும் உறவினர்கள் கீழமாயனூரைச் சேர்ந்த சிவக்குமார்(40), கோமதி(45) ஆகியோருடன் காரில் சென்றார். காரை நாகராஜ் ஓட்டியுள்ளார்.அப்போது கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாயனூர் அடுத்த பொய்கைப்புத்தூர் அருகே சென்ற போது சென்னையில் இருந்து கரூருக்கு வந்த லாரியும்- காரும் நேருக்கு நேர் மோதின. இதில் சம்பவ இடத்திலேயே இரு பேரக் குழந்தைகளும் இறந்தன. படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, அருணா, நாகராஜ், கிஷோர், சிவக்குமார், கோமதி ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி, அருணா, நாகராஜ், கிஷோர் ஆகியோர் இறந்தனர். விபத்து குறித்து மாயனூர் காவலர்கள் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரை தேடி வருகிறார்கள்.