1920ஆம் வருடம் அக்டோபர் 17ஆம் தேதி, தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவங்கப் பட்டது. இந்திய விடுதலையில் நம்பிக்கை வைத்து, அக்டோபர் புரட்சியால் ஈர்க்கப்பட்டு அமைப்பாய் ஒன்று திரளும் நோக்கத்துடன் அங்கு சென்று முதல் கிளையில் இடம் பெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் 7 பேரில் இருவர் பெண்கள், இருவர் இஸ்லாமியர்கள். கம்யூனிஸ்டுகள் என்று சொன்னாலே போதுமே, இப்படிப் பிரித்து சொல்ல வேண்டுமா என யோசிக்கலாம். இன்றைய பாகுபாடுகள் நிறைந்த சூழலில் இப்படி சொல்லித் தான் ஆக வேண்டியிருக்கிறது. இவர்களின் ஒரே தகுதியாக சித்தாந்தமும், புரட்சிகர உணர்வும் தான் இருந்தது, அடையாள அடிப்படையில் இவர்கள் இணைக்கப்படவில்லை. பின்னர், இந்தியாவில் இருந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட புரட்சியாளர்களால் இயக்கம் வலுப்படுத்தப்பட்டது. விடுதலைப் போராட்ட வேட்கை உச்சத்தில் இருந்த காலத்தில் தான் கம்யூனிச இயக்கம் பிறந்தது, இன்று வரை போராட்ட குணாம்சம் தொய்வடையாமல் மக்கள் நலனுக்காய் களத்தில் வலுவாய் காலூன்றி நிற்கிறது.
கம்யூனிஸ்டுகளே உண்மையான சவால்
கடந்து வந்த பாதையில் சந்தித்த சோதனைகளும், அவற்றைத் தாண்டிப் படைத்த சாதனைகளும் சாதாரணமானவையல்ல. தேச விடுதலைக்கான உறுதியான போராட்டம், பிரிட்டிஷாரின் அடக்குமுறை சந்திப்பு, சிறைவாசம், சித்ரவதைகள், உயிர்ப்பலி ஒரு புறம். மறு புறம், தேசத்தை எல்லைக் கோடாக மட்டும் பார்க்காமல், அதில் உள்ள உழைப்பாளி வர்க்கங்களின் நலன் சார்ந்ததாகவும், ஏகாதிபத்தியத்திடமிருந்து அடையாளப்பூர்வ விடுதலை என்று இல்லாமல் இந்தியாவின் சுயேச்சையான செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான பார்வை கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது. எனவே தான் பூரண சுதந்திரம் என்கிற முழக்கத்தைக் கம்யூனிஸ்டுகளால் முதலில் முன்னெடுக்க முடிந்தது. சுயராஜ்யம் என்பதற்கான உள்ளடக்கத்தை நிலப்பிரபுத்துவ ஒழிப்பு, சாதி ஒழிப்புடன் இணைத்து முன் வைக்க முடிந்தது.
இந்த நோக்கத்தோடு தொழிலாளிகள், விவசாயிகள் அணி திரட்டப்பட்டனர். அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) வலுப்படுத்தப்பட்டது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடகக் குழு (இப்டா) போன்றவை உருவாக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு உண்மையான, சமரசமற்ற சவாலாகக் கம்யூனிஸ்டுகள் தான் கருதப் பட்டனர், எனவே தான் சுமார் 20 ஆண்டுகள் கட்சி அடிக்கடி தடை செய்யப்பட்டது, பல்வேறு சதி வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டன.
\இக்கால கட்டத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கி நடத்திய கிளர்ச்சிகள் ஏராளம். ஆந்திராவின் தெலுங்கானா, கேரளத்தின் புன்னப்புரா வயலார், வடக்குமலபார் கிளர்ச்சி, மேற்கு வங்கத்தின் தேபாகா, மகாராஷ்டிரத்தின் வார்லி ஆதிவாசிகள் உரிமை, திரிபுரா பழங்குடியின மக்கள் உரிமைக்கான போராட்டங்கள் இவற்றில் முக்கியமானவை, வீரம் செறிந்தவை. புதுவை, கோவாவின்விடுதலைக்கான போராட்டங்களிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்கு குறிப்பிடத் தக்கது. விடுதலைக்குப் பின்னும் சுதந்திர ஆட்சியாளர்களால் கம்யூனிஸ்டுகள் மீது அடக்குமுறை தொடர்ந்தது.நவீன இந்தியா எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற விவாதத்தில் வர்க்க நலன், தேச ஒருமைப்பாடு, சமத்துவம் சார்ந்து கம்யூனிச இயக்கத்தின் நிலைபாடு அமைந்தது. நிலைபாடு மட்டுமல்ல, அவற்றுக்கு ஊறு விளைந்த போதெல்லாம் களத்துக்கு வந்தது கம்யூனிஸ்டுகள் தான்.
விரிந்த வரையறை
ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற விழுமியங்களை ஒரு விரிவான உள்ளடக்கத்துடன் முன்வைத்தது கம்யூனிஸ்டுகள் தான். உதாரணமாக, இந்தியாவின் பன்மைத்துவச் சூழலில், மதச்சார்பின்மை என்பது, அரசியலிலிருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும் என்பதுமட்டுமல்ல, அனைத்து இனங்களுக்கும், மொழிகளுக்கும்,கலாச்சாரத்துக்கும் சமத்துவம், சம வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்பதும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப் பட வேண்டும் என்பதும் சேர்த்துத்தான். அதே போல் ஜனநாயகம் வெறும் பெரும்பான்மை, சிறுபான்மை என்று இயந்திரகதியாகப் பார்ப்பது அல்ல, அரசியல் சாசனத்தின் மாண்புகளை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும். எனவே ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை, பிரித்துப் பார்க்க முடியாதவை.அடுத்து அரசியல் சாசனம் வழங்கும் உரிமைகள் தனி நபருக்கு மட்டுமல்ல, அதில் இடம் பெற்றுள்ள கூட்டாட்சிக் கோட்பாடு என்பது மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிகாரம். பல்வேறு அரசியல் கட்சிகளை இணைத்து இதற்குக் குரல் எழுப்பியதில் தவிர்க்க முடியாத, மறுக்க முடியாத பாத்திரம் கம்யூனிஸ்டுகளுடையதாகும். கூட்டாட்சி என்பது வடிவத்திலும் வார்த்தைகளிலும் இருந்தாலும், அடிப்படையில் அதிகாரக் குவிப்புக்கு வழி தருவதாகவே அரசியல் சாசன நிலைமை இருக்கிறது என்பதைக் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகவே கணித்தது. தோழர் ஜோதிபாசு, ஸ்ரீநகரில் நடந்த எதிர்க் கட்சிகளின் சிறப்பு மாநாட்டில், மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் தருவது என்பது மையத்தின் அஸ்திவாரத்தை வலுப்படுத்துமே தவிர, பலவீனப்படுத்தாது என்று முழங்கினார். நிர்வாகம், நிதி, சட்டம் இயற்றுதல் போன்றவற்றில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்பதற்கான வரைவு முன்வைக்கப்பட்டது. நிதி பகிர்வு, வரி வருவாய் குறித்த தீர்க்கமானகோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சாசன பிரிவு 356, தேச ஒற்றுமை, மதச்சார்பின்மை போன்றவற்றுக்கு அபாயம் வரும் நேரம் தவிர மற்ற படி பயன்படுத்தப்படக் கூடாது, ஆளுநர் தேவையில்லை, ஒரு வேளை வேண்டும்என்றால், சர்க்காரியா கமிஷன் வழிகாட்டும் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் 3 நபர்களின் பெயர்களை மாநில அரசு பரிந்துரைக்க, அதில் ஒன்றைக் குடியரசு தலைவர் தேர்வுசெய்யலாம். சர்வதேச உடன்பாடுகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும், உலக வர்த்தகக் கழகம்போன்ற அமைப்புகளின் முடிவுகள் மாநிலங்களை பாதிப்பதாக இருப்பதால், மாநிலங்களின் கவுன்சிலில் இது பற்றிவிவாதிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். உள்ளாட்சிகளுக்கும் உரிய அதிகாரம், நிதி போன்றவற்றின் தேவைஎழுப்பப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசுகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சி மாற்றம் கொண்டு வருவதும், மக்களின் விருப்பம் என்ற ஜனநாயகத்தை மறுதலிக்கும் நடவடிக்கையே.
ஜனநாயக உரிமைகளை முற்றிலும் பறித்த அவசரகால நிலையின் போது கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். ஜனதா அரசு பதவியேற்ற பின், இனியொரு முறை இத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்பதற்கான கறாரான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் சீர்திருத்தத்துக்கான அழுத்தம் கூட,அனைத்துக் கட்சிகளும் எல்லா விதங்களிலும் சமதளத்தில் நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காகத் தான்.சமத்துவம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், பாலினத்தின் பெயரால் பாகுபாடுகள் நிலைநிறுத்தப்படும் கட்டமைப்பைப் பாதுகாப்பது என்பதற்குப் பல பரிமாணங்கள் இருந்தாலும், அவையும் ஒரு விதத்தில் ஜனநாயக விரோத நடவடிக்கையே. பெண்ணுரிமைக்கான போராட்டம், ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதி என்றும், சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது.
இருப்பது சிறுபான்மை அரசே!
இன்றைய பெரும்பான்மை அரசுகள், உண்மையிலேயே ஒரு சிறு பகுதியினரை உள்ளடக்கிய வர்க்கத்தின் நலன் காக்கவே ஆட்சி செய்கின்றன. பெரும்பகுதி உழைக்கும் மக்கள் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசு என்பது மட்டுமே ஜனநாயகத்துக்கான அளவுகோலாகி விட முடியுமா?மத்தியில் பாசிசத் தன்மை கொண்ட பாதையில் பாஜக அரசு அவர்களின் சித்தாந்தப் படியே சென்று கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமயக் கொள்கைகள் கோலோச்சுகிறது. தட்டிக் கேட்பவர்கள் நசுக்கப்படுகிறார்கள். சிறையில் தள்ளப்படுகிறார்கள். எதேச்சதிகாரம் மிதமிஞ்சிப் போவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜனநாயக உரிமைகளும், சிவில் உரிமைகளும் மிதிபடுகின்றன, கிழிபடுகின்றன. பெண்கள், குழந்தைகள், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மை மக்கள், மாற்றுத்திறனாளிகள் மீது சொல்ல முடியாத வன்கொடுமைகள் அரங்கேறுகின்றன. நாடாளுமன்றம் நாலு தம்பிடிக்குக் கூட மதிக்கப்படுவதில்லை. கார்ப்பரேட்டுகளின் அவசரத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவசரச் சட்டங்கள்கொண்டு வரப்பட்டு, சடசடவென்று சட்டமாக்கப்படுகின்றன. நமது அடிப்படை வர்க்கங்களான தொழிலாளிகள், விவசாய தொழிலாளிகள், ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய சட்டங்களும், கொள்கை முடிவுகளும் மாநிலங்களின் உரிமைகளை வெகுவாக மீறுகின்றன. வேலையின்மை உச்சத்தைத் தொடுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியோ எதிர்மறையில் போய்க்கொண்டிருக்கிறது. தமிழுக்கான சம அந்தஸ்து பலவிதங்களிலும் மீறப்படுகிறது. அரசியல் சாசனத்துக்கு மாற்றாக மனுவின் கோட்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று ஒற்றைத்துவத்தை நோக்கி நகர்வுகள் இருக்கின்றன. இந்திய குடியரசின் குணாம்சத்தை மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு சக்திகளும் வலுவாக இல்லாவிட்டால், இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள வலதுசாரி திருப்பம் மேலும் நிலை பெறும். எத்தனையோ சவால்களை சந்தித்து முன்னேறிய இயக்கம்தான் கம்யூனிச இயக்கம். உலகில் பாசிசத்தை வெற்றிகொண்டதும் கம்யூனிஸ்டுகள் தான். அதன் நூற்றாண்டில், இந்திய மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கான பாதையில் உறுதியோடு நடை போடுவோம்.
கட்டுரையாளர்: உ.வாசுகி, சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர்