ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர்காலித் மீதான துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் சிவசேனா வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில், நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு வெறுப்பரசியலுக்கு எதிராக ஒன்று படுவோம் என்ற கூட்டத்தில் உமர்காலித் பங்கேற்றார். அப்போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் உமர்காலித் நல்வாய்ப்பாக காயங்களின்றி உயிர் தப்பினார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய தர்வேஸ் ஷாபூர், நவீன் டாடல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் குற்றவாளி நவீன் டாடல் கடந்த 6 மாதங்களுக்கு முன் சிவசேனாவில் இணைந்தார். அதற்கு தேசியவாதம் மற்றும் பசு பாதுகாப்பில் ஆர்வம் கொண்டுள்ளதாதல் சிவசேனாவில் இணைந்தாக நவீன்டாடல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வரும் அக்டோபர் 21 ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் பகதூர்கர் தொகுதியில் சிவசேனா வேட்பாளராக நவீன் டாடல் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சிவசேனாவின் அரியானா (தெற்கு) தலைவர் விக்ரம் யாதவ் நவீன் டாடல் பசு பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளுக்காக போராடி வருவதால் எங்கள் கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.