ஹரியானாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்கள் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புத்தக்கேரா கிராமத்தில் 50 அடி பாதாளச்சாக்கடை ஒன்று உள்ளது. இந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஒப்பந்த முறையில் பணியாற்றும் சுரேந்தர் குமார்(28), மகேந்தர் சிங்(25), ராஜேஷ்(26) மற்றும் ராகுல் குமார்(27) ஆகிய 4 ஊழியர்கள் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஒருவர் பின் ஒருவராக குழிக்குள் இறங்கியுள்ளனர்.
ஆனால் கழிவுநீர் தொட்டியில் இறங்கி பல நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த நகராட்சி ஊழியர்கள் உள்ளே எட்டி பார்த்தபோது, 4 பேரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்கி 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், 4 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதனைதொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஊழியர்களை விசாரித்து வருகின்றனர்.