states

சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்கும் இல்லாதவர்கள்தான் ஆர்எஸ்எஸ் - பாஜகவினர்!

மும்பை, டிச. 26 - ஆர்எஸ்எஸ், பாஜக-வினர், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லாதவர்கள் என்றும், அதனால், அடுத்த  கட்சியின் தலைவர்களை திருடி தங்களின் தலைவர்களாக காட்டிக் கொள்கின்றனர் என்றும் சிவசேனா-வின் அதிகாரப்பூர்வ ஏடான ‘சாம்னா’ சாடியுள்ளது. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “எங்களைப் பொறுத்தவரை நாட்டிற்கு 2 தேசத்தந்தை உள்ளனர். மகாத்மா காந்தி பண்டைய இந்தி யாவின் தேசத்தந்தை, புதிய இந்தியாவின் தேசத்தந்தை பிரதமர் மோடி” என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அம்ருதா பட்னாவிஸின் கருத்து குறித்து, ‘உத்தவ் பாலாசாகேப் சிவ சேனா’ கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை யான ‘சாம்னா’ தலையங்கம் தீட்டியுள்ளது. அதில், “சாவர்க்கரை தேசத்தந்தை என்று பாஜக-வினர் யாரும் பேசுவதில்லை. கடுமையான சிறைவாசம் அனுபவித்த சாவர்க்கரை எப்போதும் ஆர்எஸ்எஸ் எதிர்த்துள்ளது. இப்போது இவர்கள் இந்தி யாவை பழைய இந்தியா, புதிய இந்தியா  என்று பிரிக்கிறார்கள்” என்று விமர்சித்துள்ளது.  மேலும், “தேசத்தின் தந்தை யார் என்பது  இங்கு பிரச்சனை இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் பாஜக-வின் பங்களிப்பு என்ன என்பதுதான் கேள்வி” என்று கூறி யிருக்கும் ‘சாம்னா’, “சுதந்திரப் போராட்டத் தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எந்தப் பங்கும் இல்லை. எனவேதான், அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் போன்ற காங்கிரசுடன் தொடர்புடைய தலைவர்களைத் திருடு கின்றனர்” என கடுமையாக சாடியுள்ளது.