states

img

மணிப்பூரில் வன்முறை அதிகரிப்பு: காலவரையற்ற ஊரடங்கு அமல்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மணிப்பூரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது குக்கி பழங்குடி இனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேரை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் காயம்டைந்ததாகவும், அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

மணிப்பூர் மாநிலத்தில் பைரோன் சிங் தலைமையிலான பாஜக அரசு தனது வாக்குவங்கி அரசியலுக்காக மெய்டெய் சமூக மக்களை பழங்குடிளாக அறிவிப்பதாக வாக்குறுதி அளித்தது. அங்கு ஏற்கனவே குக்கி பழங்குடியின சமூக மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியது. பாஜக அரசின் அறிவிப்பு, மலைவளத்தை சூறையாடும் சூழ்ச்சி கொண்டது என்று குக்கி பழங்குடிகள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுக்குப் போட்டியாக மெய்டெய் பிரிவினரை பாஜக தூண்டிவிட்டது.

இதில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்டேய் மக்களுக்கும், குக்கி பழங்குடிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.இந்த மோதலில் தற்போது வரை, இருதரப்பிலும் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது வரை மணிப்பூரில் வன்முறை தொடந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தான், ஜிரிபாம் மாவட்டத்தின்போரோபெக்ராவில் உள்ள காவல்நிலையம் மீது குக்கி பழங்குடியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது பதில் நடவடிக்கையாக சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் குக்கி பழங்குடியைச் சேர்ந்தவர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

இதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதைத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, மாயமானவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.