ஐஐடி மும்பையில் முதுகலை மாணவர் ஒருவர் விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை எற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷன் மாளவியா என்ற மாணவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவர்கள் 4-வது மாடியில் உள்ள தனது விடுதி அறையில், தன் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று எழுதிவைத்துள்ளார்.
பலத்த சத்தம் கேட்டு அங்கு பணியிலிருந்த பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் ஓடிவந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் மாளவியா கிடந்ததைக் கண்டு, விடுதி அதிகாரிகளுக்கும், சக மாணவர்களுக்கும் தகவல் கொடுத்தார். மாணவரை மீட்டு உடனடியாக ராஜாவாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் மரணம் குறித்து போவாய் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.