states

img

கர்நாடகத்தில் பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம்..!

பெங்களூரு, மே 2 - கர்நாடகத்தில் தங்களது தலைமையில் ஆட்சி அமைந்தால் இந்துத்துவா பயங்கரவாத இயக்கமான ‘பஜ்ரங் தள்’ அமைப்புக்கு தடை விதிப்போம் என அறிவித்து, காங்கிரஸ் கட்சி அதிரடி காட்டியுள்ளது. “காங்கிரஸ் ஆட்சி யில் மதம் அல்லது ஜாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தக் கூடிய தனி நபர்கள் அல்லது இயக்க ங்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். பஜ்ரங் தள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட இயக்கங்கள் சட்டத்தை மீறி செயல்படுவதை அனுமதிக்க முடியாது. அந்த வகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இத்தகைய இயக்கங்கள் மீது தடை விதித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 அன்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய ஆளும்கட்சி யான பாஜக, திங்களன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், குடும்பம் ஒன்றுக்கு, தினமும் அரை லிட்டர் பால், மாதந்தோறும் 5 கிலோ அரிசி, பருப்பு, இந்துப் பண்டிகைகளையொட்டி ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர் என சலுகைகளை வாரி இறைத்தது. கூடவே, கர்நாடகத்தில் உள்ள பழமையான கோவில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்; சட்டவிரோதக் குடியேறிகளைக் களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்; மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதிகளை அளித்தது. இந்நிலையில்தான், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்,

செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட தனது  தேர்தல் அறிக்கையில், “கர்நாடகாவில் பல்வேறு மத அடிப் படையிலான வன்முறை சம்பவங்களுக்கு காரணமாக இருந்து வரும் பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை விதிக்கப்படும்” என்று அறிவித்து பாஜக-வுக்கு பதிலடி கொடுத்துள்ளது. “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை வழங்கப்படும், ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்; வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, கேழ்வரகு, கம்பு, சிறுதானியங்களில் எதை தெரிவு செய்கிறார்களோ அது 10 கிலோ வழங்கப்படும்; கேஎஸ்ஆர்டிசி அல்லது பிஎம்டிசி  பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி; 2006ஆம் ஆண்டிற்கு பின்னர் பணியில் சேர்ந்த அரசு  ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நீட்டிப்பு வழங்கப் பரிசீலனை செய்யப்படும்; அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து அரசு துறைகளிலும் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்; ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் 500 லிட்டர் டீசல் வரியின்றி வழங்கப் படும் மாட்டுச் சாணம் கிலோ 3 ரூபாய் என்ற வகையில் கொள்முதல் செய்யப்படும்” என்றும் அறிவித்துள்ளது.