states

img

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்!

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாக ரூ.15.90 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகர் அறிவழகன் மற்றும் அவரது மனைவி லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி நத்தமேடு பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் காத்தவராயன் என்பவர் அரசு வேலையில் சேர முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில், பாஜக பிரமுகர் அறிவழகன் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

பாஜக பிரமுகர் அறிவழகன் மற்றும் அவரது மனைவியிடம் தனக்கு அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். காத்தவராயனிடம் ஒன்றிய அரசின் உணவுக் கழகத்தில் இயக்குநர் பதவி வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

வேலைக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறியதால், 7 தவணைகளில் அறிவழகன் மற்றும் அவரது மனைவி லாவண்யா வங்க கணக்குகளில் ரூ.15.90 லட்சத்தை காத்தவராயன் செலுத்தியுள்ளார். ஆனால் காத்தவராயனுக்கு வேலை வாங்கி தராமல் அறிவழகன் காலம் கடத்தியுள்ளார்.

காத்தவராயன் தொடர்ந்து அறிவழகனிடம் வேலைக்காக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுடுள்ளார்.அதற்கு அறிவழகன் மற்றும் அவரது மனைவி சரிவர பதிலளிக்காமல் காலத்தை இழுத்தடித்து வந்த நிலையில், அறிவழகன் தலைமறைவாகி உள்ளார்.

இதனையடுத்து, தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாஜக பிரமுகர் தன்னிடம் இருந்து ரூ.15.90 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையத்தில் காத்தவராயன் புகார் அளித்தார்.

மேலும், அறிவழகனின் மனைவியும் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்தார் என்று அவர் மீதும் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, புகாரின்பேரில் இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், தலைமறைவாக இருக்கும் அறிவழகனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

வேலைவாங்கி தருவதாக சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பணம் பெற்று ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.