தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் இணைய வேண்டும் எனக் கூறி ரூ.300 கோடிக்கு விலை பேசிய 3 பேரை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஐதராபாத் அருகே இருக்கும் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ரகசிய பேரம் நடப்பதாக போலீசாருக்கு கடந்த அக். 26-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதை அடுத்து சோதனை நடத்திய போலீசார், ஹரியானாவை சேர்ந்த மதகுரு ராமசந்திர பாரதி என்ற சதீஷ் சர்மா, திருப்பதியைச் சேர்ந்த சாமியார் டி சிம்ஹாயாஜி, ஐதராபாத் தொழிலதிபர் நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, கைதான இவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி அக்.27-ஆம் தேதி விடுவித்து உத்தரவிட்டது. இந்த சூழலில், ராமச்சந்திர பாரதிக்கும், டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ ரோஹித் ரெட்டிக்கும் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடலின் ஆடியோக்கள் நேற்று வெளியாகின. இதை அடுத்து, ஹைதராபாத் போலீசார் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், ஆளும் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் இணைய வேண்டும் எனக் கூறி ரூ.300 கோடிக்கு விலை பேசிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.