ஹைதராபாத், பிப். 27 - மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் உயர்கல்வி நிறுவனங்களை நாம் உருவாக்கவில்லை என்பதையே, விளிம்பு நிலை மாணவர்களின் தற்கொலை கள் காட்டுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், “தலித் - பழங்குடி மாணவர்களை அவமானப்படுத்துவ தற்காக அவர்களின் மதிப்பெண்ணைக் கேட்பதையும், அவர்கள் திறமையற்ற வர்கள் என முத்திரை குத்துவதையும் நிறுத்த வேண்டும்” என்று கூறியிருக்கும் டி.ஒய். சந்திரசூட், “சமூக உண்மைகளை எதிர் கொள்வதிலிருந்து நீதிபதிகள் வெட்கப் பட்டு ஒதுங்கியிருக்க முடியாது” எனவும் குறிப்பிட்டுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி அகா டமி (NALSAR) என்ற சட்ட பல்கலைக்கழ கத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:
“விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன. தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலான மாணவர்கள் தலித் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த வர்கள் என்றும், இந்த மோசமான நிலை, நாம் கேள்வி கேட்க வேண்டிய சூழ்நிலையை யே உணர்த்துகிறது என்றும் பேராசிரியர் சுக்தேவ் தோரட் குறிப்பிட்டுள்ளார். 75 ஆண்டுகளில், நாம் சிறந்த நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம். ஆனால், அதற்கும் மேலாக நாம் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் அமைப்புகளை உருவாக்க வேண்டும். நான் இதைப் பற்றி ஏன் பேசு கிறேன் என்றால், பாகுபாடு பிரச்சனை நேரடி யாக மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் கூருணர்ச்சியுடன்தொடர்புடையது. நீதித்துறை உரையாடல் நிகழ்வுகள் உலகம் முழுவதும் பொதுவானது. ஜார்ஜ் பிலாய்டின் கொலைக்குப் பிறகு, அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கான (Black Lives Matter) இயக்கம் எழுச்சி பெற்றபோது, அமெரிக்க உச்ச நீதிமன்ற த்தின் 9 நீதிபதிகளும் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். கறுப்பின மக்களின் மோச மான வாழ்நிலை குறித்து அதில் பேசப் பட்டிருந்தது.
அதேபோல் இந்தியாவில் உள்ள நீதிபதிகளும் நீதிமன்ற அறைக்கு உள்ளே யும் வெளியேயும் சமூகத்துடன் உரையாடு கிறார்கள். சமூக உண்மைகளிலிருந்து நீதிபதிகள் வெட்கப்பட்டு விலகியிருக்க முடி யாது. அந்த வகையிலேயே, நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளைத் தவிர, நமது சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு கட்டமைப்பு சிக்கல்கள் மீது கவனம் செலுத்த முயற்சித்து வருகிறேன். இந்தியாவில் சமூகப் பிரிவுகளுடன் சேர்த்து, அந்தப் பிரிவு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் பட்டியலை வெளி யிடுவது, தலித் மற்றும் பழங்குடி மாண வர்களை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் மதிப்பெண்களைக் கேட்பது, அவர்களின் ஆங்கிலப் புலமை யைக் கேலி செய்வது, திறமையற்றவர்கள் என்று முத்திரை குத்துவது போன்ற நடை முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் களின் அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கப்படுவது, சாதி அடிப்படையிலான பிரிவினைக்கு வழிவகுக்கும். இதனை முடிவுக்கு கொண்டுவருவதை, நுழைவு மதிப்பெண்களின் அடிப்படையில் விடுதிகள் ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவதில் இருந்து தொடங்கலாம். இவ்வாறு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியுள்ளார்.