புதுதில்லி, மார்ச் 3 - “உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கும் உரிமை அரசுக்கு உண்டு” என ஆர்எஸ்எஸ் ஊர்வலத் திற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதங் களை வைத்துள்ளது. மேலும், ஆர்எஸ்எஸ் அணி வகுப்பை முழுமையாக எதிர்க்க வில்லை, மாற்று வழிகளையே நாங்கள் பரிந்துரைக்கிறோம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்தும் விவ காரத்தில், 23 இடங்களில் சுற்றுச்சுவ ருடன் கூடிய மைதானத்திற்குள் நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகம்மது சபீக் ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல்துறையிடம் விண்ணப்பிக்குமாறு ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அணி வகுப்பிற்கு அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு காவல் துறைக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்த உத்தர வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 3) நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி, ஆஜராகி வாதாடினார். அவர், “ஆர்எஸ்எஸ் நடத்த உத்தேசித்துள்ள வழித்தடப் பய ணத்தை முற்றிலும் எதிர்க்கவில்லை. ஆனால் சில பகுதிகளில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட அணி வகுப்பை நடத்த வேண்டும் என்கிறோம். உதாரணமாக, கோயம்புத்தூரில் வெடிகுண்டு வெடிப்புகள் நடந்தன. பிஎப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டது. இது போன்ற சில பகுதிகளில் நிபந்தனை களுடன் மட்டுமே ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை அனுமதிக்க முடி யும் என்கிறோம். சுற்றுச்சுவர்களு டன் கூடிய திறந்தவெளியில் அணி வகுப்பை நடத்துமாறு கூறு கிறோம்” என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, “ஆர்எஸ்எஸ் விருப்பப்படி அணி வகுப்பை நடத்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அனுமதித்துள் ளது என்றும் சட்டம் ஒழுங்கு நிலை மையை மாநில அரசுதான் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்றார். மேலும், “தலித் சிறுத்தை கள் மற்றும் ஆளும் திமுக போன்ற பிற அமைப்புகளின் எதிர்ப்பு ஊர்வலங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் மட்டுமே புறக்கணிக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார். மேலும், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரும் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை என்றும் வாதிட்ட அவர், பிஎப்ஐ அச்சுறுத்தலைக் காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை தடுப்பதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார். அதற்கு, “பொது அமைதி தொடர்பாகவே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்பு நடந்ததையும், பிஎப்ஐ தடை செய்யப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியுமா? மேலும், அரசிடம் சில உளவுத்துறை அறிக்கைகள் உள்ளன. அதுபோன்ற உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கும் உரிமை அரசுக்கு உண்டு” என்ற தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்கி, “மாற்று வழித்தடம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்பை (ஆர்எஸ்எஸ்) அரசு தொடர்பு கொள்ளும் என்றும், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், “மார்ச் 5-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் நடத்துவதாக அறிவித்துள்ள உத்தேச அணிவகுப்பையும் ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்” என்ற முகுல் ரோத்கி, “நடத்தியே ஆக வேண்டும் என்பதற்கு மார்ச் 5 அப்படியொன்றும் புனிதமான நாளும் அல்ல” என்று குறிப்பிட்டார். அதற்கு ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, “மார்ச் 5-ஆம் தேதி உத்தேச அணிவகுப்பை நடத்தும் திட்டம் ஆர்எஸ்எஸ்- சிடம் இல்லை” என்று தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களை யும் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தற்போது இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை யை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.