புதுதில்லி, ஜூலை 23 - சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட இந்திய 22 மொழிகளையும் பயிற்றுமொழி யாக பயன்படுத்த சிபிஎஸ்இ அனுமதி வழங்கி உள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை விருப்பப் பயிற்று மொழியாகப் பயன்படுத்து வது பற்றி பரிசீலிக்குமாறு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இமானுவேல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழ் உட்பட 22 மொழிகளில் பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணிகள் என்சிஇஆர்டி (NCERT) மூலம் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ இயக்குநர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் பயிற்று மொழியாக உள்ளன. தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற கொள்கையின் படி, கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடை முறைக்கு வந்தது. இந்நிலையில், ஆங்கிலம், இந்தியில் மட்டுமன்றி தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் பயிற்று மொழியாக பயன் படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.