சிம்லா, டிச.11- இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் புதிய முத லமைச்சராக சுக்விந்தர்சிங் சுக்கு ஞாயிறன்று பதவியேற்றுக் கொண்டார். இமாச்சலப்பிரதேச மாநில சட்டசபைக்கு நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 25 இடங்களிலும், மற்றவர்கள் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, நடைபெற்ற காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக (முதலமைச்சர்) சுக்விந்தர் சிங் சுக்குவும் (58), துணைத் தலைவராக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர்சிங் சுக்கு பதவியேற்றார். துணை முதல்வராக முகேஷ் அக்னிகோத்ரி பதவியேற்றார். சிம்லாவில் உள்ள உள்ள ரிட்ஜில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர்களுக்கு மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வ நாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு நிகழ்வில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.