states

img

துருக்கியில் அவசர நிலை

அங்காரா, பிப்.9- துருக்கியில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பத்து மாகாணங்களில் அவசர நிலையை நடைமுறைப்படுத்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.  மீட்புப்பணி மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை முழுமையாக இன்னும் மீட்க முடியவில்லை. 90 விழுக்காட்டினர் மீட்கப்பட்டு விட்டார்கள் என்று துருக்கி அரசுத்தரப்பில் சொல்லப்பட்டாலும், 10 விழுக்காட்டினர் என்பது பெரும் அளவில் இருக்கும். பல்வேறு நாடுகளில் இருந்து மீட்புப்படை வீரர்கள் துருக்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், உயிரிழப்புகள் 20 ஆயிரத்தைத் தொடலாம் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் எச்சரித்திருக்கிறார். உயிரிழந்தவர் களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கும் என்று தான் அச்சப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னைத்தவிர தனது குடும்பத்தினர், உறவினர்கள் என்று யாரையுமே என்னால் பார்க்க முடியவில்லை. அவர்களை எப்படி மீட்கப் போகிறோம் என்று தெரியவில்லை என்று கடுமையாகப் பாதிக்கப்பட்ட மலாட்யா பகுதியைச் சேர்ந்த முராட் அலினாக் கவலை தெரிவிக்கிறார்.  கடுமையாகப் பாதிக்கப்பட்ட மற்றொரு நாடான சிரியாவில், மீட்புப்பணி மேற்கொள்வதில் அரசியல் ரீதியான சிக்கல்கள் எழுந்துள்ளன. இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டும், சிரியா மீது தாங்கள் விதித்துள்ள பல்வேறு தடைகளை விலக்க அமெரிக்கா முன்வரவில்லை. இதனால், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பல தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளன.