states

img

ஊழல் எம்எல்ஏ விருபாக்சப்பாவுக்கு, பாஜக-வினர் பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் வரவேற்பு!

பெங்களூரு, மார்ச் 8 - ரூ. 7 கோடியே 72 லட்சம் லஞ்சம் வாங்கிக் குவித்த வழக்கில், முன்ஜாமீன் பெற்று ஊர்திரும்பிய பாஜக எம்எல்ஏ-வுக்கு, அக்கட்சியினர் கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் பட்டாசு வெடித்தும், மலர்களைத் தூவியும் வரவேற்பு அளித்துள்ளனர். கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடெட் (Karnataka Soaps and Detergents Limited - KSDL) நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா ஆவார்.  அண்மையில், கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட்டின் மூலப்பொருட்களுக்கான டெண்டர் வழங்க, எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா சார்பில் அவரது மகன் பிரசாந்த் மதல், காண்ட்ராக்டர் ஒருவரிடம் ரூ. 40 லட்சம் லஞ்சம்  வாங்கி கையும் களவுமாக மாட்டினார்.  இதுதொடர்பாக பிரசாந்த் மதலை கைது செய்த லோக் ஆயுக்தா போலீசார், ஊழல் தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவரது வீடு, அலுவலகத்தில் அதிரடியாக சோதனை  நடத்தினர். அப்போது அலுவலகத்திலிருந்து ரூ. 1 கோடியே 72 லட்சம், வீட்டிலிருந்து ரூ. 6 கோடி என ஒட்டுமொத்த மாக ரூ. 7 கோடியே 72 லட்சம் லஞ்சப் பணம் பிடிபட்டது.  இவ்விவகாரத்தில் பிரசாந்த் மதல் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா, தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறை வானார். அவரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு, லோக் ஆயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பியும், மதல் விருபாக்சப்பா ஆஜராகவில்லை. மாறாக, கைது நடவடிக்கையில் இருந்து  தப்பிக்க, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் திங்களன்று முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றமும், மதல் விருபாக்சப்பாவுக்கு ரூ. 5 லட்சம் பிணைத்  தொகை மற்றும் உத்தரவாதத்துடன் கூடிய நிபந்தனையின் பேரில், செவ்வாயன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. மதல் விருபாக்சப்பா 48 மணிநேரத்தில் லோக் ஆயுக்தா முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, லஞ்ச வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா, 5 நாட்களுக்குப் பிறகு வெளியுலகிற்கு வந்தார். இந்நிலையில்,  உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று திரும்பிய அவருக்கு- ஏதோ குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானவர் போல- பாஜக தொண்டர்கள், பட்டாசு களை வெடித்தும், மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.