states

முஸ்லிம் அல்லாத வெளி நாட்டினருக்கு குடியுரிமை: 9 மாநில உள்துறை செயலர்களுக்கு அதிகாரம்!

புதுதில்லி, நவ. 10 - பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடு களில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டவர்களு க்கு இந்திய குடியுரிமை வழங்க 31 மாவட்டங்களின் ஆட்சி யர்கள் மற்றும் 9 மாநிலங்களின் உள்துறை செயலர்களுக்கு ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அதிகாரம் வழங்கியுள்ளது.  2021 ஏப்ரல் முதல் டிசம்பர் 31 வரை, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த  முஸ்லிம் அல்லாத சமூகத்தை சேர்ந்த 1,414 வெளிநாட்டி னருக்கு, இந்திய குடியுரிமைச் சட்டம் 1955-இன் கீழ் பதிவு அல்லது இயற்கைமயமாக்கல் மூலம் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தில்லி மற்றும் மகா ராஷ்டிரா ஆகிய 9 மாநிலங்களிலும் இந்திய குடியுரிமைச் சட்டம் 1955-இன் கீழ் குடியுரிமைகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில், குடியுரிமைச் சட்டம் 1955ன் கீழ், பாகிஸ் தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க 31 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் 9 மாநில உள்துறை செயலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-இன் கீழ் அல்லாமல், குடியுரிமைச் சட்டம் 1955-இன் கீழேயே, இந்த குடியுரிமை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது ஆகும். ஏனெனில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ வேகவேகமாக கொண்டுவந்த ஒன்றிய பாஜக அரசு, இந்த சட்டத்திற்கான விதிகளை இப்போதுவரை இறுதி செய்ய வில்லை. இதன்காரணமாக, திருத்தப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்கீழ் யாருக்கும் இந்திய குடியுரிமையும் வழங்கப்பட வில்லை.