states

img

பிரிவினைவாதத்தைத் தூண்டியதாக சோனியா காந்திக்கு நோட்டீஸ்!

புதுதில்லி, மே 9 - கர்நாடகத்தின் இறையாண்மை என்று பேசியதன் மூலம் சோனியா காந்தி பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாக பாஜக-வினர் அளித்த புகாரில் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத இந்திய தேர்தல் ஆணை யம், பாஜக அளிக்கும் புகார்கள் மீது மட்டும் விரைந்து நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பும் பணியைச் செய்து வருகிறது. பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தின் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்பதாக வும், அவர், பிரச்சாரத்தில் இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பெயர்களை மட்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க உத்தரவிடுமாறும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதேபோல கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைந்தால் கலவரம் வெடிக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வன்முறையைத் தூண்டுகிறார் என்று காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது.  ஆனால், பாஜக-வுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், 2019 மற்றும் 2023-க்கு இடையில் மாநிலத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான  (‘Corruption Rate Card’) சுவரொட்டி மற்றும் விளம்பரங்களை காங்கிரஸ் வெளியிட்ட தற்காக, பாஜக அளித்த புகாரின் பேரில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வரிசையில், காங்கிரஸ் மூத்த தலைவர்  சோனியா காந்திக்கும் தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மே 6-ஆம் தேதி ஹூப்ளியில் உரை யாற்றிய சோனியா காந்தி, “

பாஜக வெற்றி பெறாவிட்டால் கர்நாடகாவுக்கு மோடியின் ஆசி  கிடைக்காது. பாஜக தோற்றால் இங்கு கலவரம் ஏற்படும் என்று சொல்கிறார்கள். இன்று, அவர்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால், கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது” என்று பேசியிருந்தார். அவரின் இந்தப் பேச்சு காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருந்தது.  உடனே, சோனியா காந்தியின் இந்தப் பேச்சு  நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும், இதற்காக சோனியாகாந்தி மீது நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதற்காக, காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணை யத்தில் பாஜக புகார் அளித்தது. தேர்தல் ஆணையமும் இதற்காகவே காத்திருந்தது போல, சோனியா காந்தியின் கருத்துக்கும், கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான பதிவுக்கும் விளக்கம் தருமாறு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே-வுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.