states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

பிரதமர் மோடியின் அலுவலகம் பதிவிட்டுள்ள டுவிட்டில் ‘யுவ சக்தியால் இயக்கப்படும் இந்தியா ஸ்டார்ட்-அப்களின் உலகில் முன்னேறுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மோடியின் மற்றோரு மக்கள் தொடர்பு அறிக்கையில், 2023-இன் முதலாம் காலாண்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் நிதி திரட்டல் கடந்த ஆண்டை விட 75% குறைந்து வேலை இழப்புக்கு வழிவகுத்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. உண்மையில் மக்களின் வாங்கும் சக்தி உயரும் வரை இந்த நிலையை மாற்ற முடியாது

கடும் நிதி நெருக்கடியில்  இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்  

ஒரே காலாண்டில் 75% நிதியிழப்பு

கடும் நிதி நெருக்கடியில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிக்கியுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே காலாண்டில் 75% நிதியிழப்பை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்களிடமிருந்து நிதி உதவியைப் பெற்று சர்வதேச நிறுவனங்களாக வளர்வதற்காக முளைக்கும் சின்னஞ்சிறிய நிறுவங்களே  ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆகும். கூகுள், உபெர், பேஸ்புக்,டுவிட்டர், ஐடி நிறுவனங்கள் போன்றவை ஸ்டார்ட்அப் நிறுவனங்களாகத் துவங்கியவைதான்.  இந்தியாவில் 2,700-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் தற்போதைய நிலையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 30% (தோராயமாக) அளவில் வேலைவாய்ப்பை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில்,  ஒன்றிய மோடி அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கை மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும்  மந்தநிலையால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனத் துறை மிக மோசமான அளவில் வீழ்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. 2023-இன் நடப்பு காலாண்டில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ரூ.16 ஆயிரம் கோடி (2 பில்லியன் டாலர்) அளவிற்கு நிதியிழப்பை சந்தித்துள்ளது. புரியும்படி சொன்னால் 75% அளவிற்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் இந்த நிதியிழப்பு இந்தியாவின் வேலை வாய்ப்புச் சந்தையை பாதிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிபி இன்சைட்ஸ் அறிக்கையின்படி கடந்த ஆண்டு (2022) 561 ஸ்டார்ட்அப்கள் நிறுவனங்கள் நிதி திரட்டலில் ஈடுபட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 271 இந்திய ஸ்டார்ட்அப்கள் மட்டுமே நிதி திரட்டியுள்ளன.

10 பில்லியன் டாலர் கூட திரட்டுவது சிரமம்

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தற்போதைய  நிலைமையை உற்றுநோக்கினால் நடப்பாண்டில் நிதிதிரட்டுவது வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. கடந்த 2021இல் 30 பில்லியன் டாலரும் (ரூ.2.4 லட்சம் கோடி), 2022-இல் 20 பில்லியன் டாலரும் (ரூ.1.6 லட்சம் கோடி) என இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிதி திரட்டலில் இறங்குவரிசையில் பயணித்து வரும் நிலையில், நடப்பாண்டில் மிக மோசமான அளவில் நிதியிழப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதாவது 10 பில்லியன் டாலர் (ரூ.82,000 கோடி) திரட்டுவதே சிரமமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பில்லியன் மக்கள் தொகை... மில்லியனில் பரிவர்த்தனை...  டிஜிட்டல் உலகில் இந்தியா வளர்ந்து விட்டதாக ஒன்றிய மோடி அரசு அடிக்கடி வெற்றுக்கூச்சல் போட்டாலும், மோடி அரசின் டிஜிட்டல் கூச்சலை ஜொமோட்டோ (Zomato), யுபிஐ (UPI) போன்ற இந்திய ஸ்டார்ட்அப்களை வைத்து பாதகமான நிலைமையை கணக்கிடலாம். நாட்டில் பில்லியனுக்கும் (100 கோடி) அதிகமான மக்கள்தொகை இருந்தபோதிலும், உணவு விநியோக நிறுவனமான ஜொமோட்டோ ஆண்டுக்கு 50 மில்லியன் பரிவர்த்தனை பயனர்களை மட்டுமே கொண்டுள்ளது.  மாநில ஆதரவு டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையான யுபிஐ (UPI) வெறும் 260 மில்லியன் மக்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இந்திய ஸ்டார்ட்அப்கள் ஒரு பில்லியன் நுகர்வோருக்கு சேவை செய்யவே இல்லை. அவை அனைத்தும் அதிகபட்சம் 100 மில்லியன் நுகர்வோருக்கே சேவையாற்றுகின்றன என இ-காமர்ஸ் பிரிவான பிளிப்கார்ட்டின் முன்னாள் உயர் அதிகாரி அங்கித் நகோரி தெரிவித்துள்ளார்.

பலமாக யோசிக்கும் சர்வதேச  முதலீட்டு நிறுவனங்கள்

இந்திய சந்தையில், அதிருப்தியின் முதல் அறிகுறி 2021இல் நஷ்டமடைந்த டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பே டிஎம் (Paytm) தோல்விப் பட்டியலுக்கு இறங்கி மீண்டு வந்தது. சமீபத்திய வாரங்களில் பிளாக் ராக் (BlackRock (BLK.N)) என்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனம், இந்திய ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜுவின் மதிப்பீட்டை உள்நாட்டில் பாதியாகக் குறைத்தது. அதாவது 22 பில்லியன் டாலரில் இருந்து 11.15 பில்லியன் டாலராக குறைத்தது. அதே நேரத்தில் இன்வெஸ்க்கோ (Invesco (IVZ.N) என்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனம், இந்திய உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியின் (Swiggy) மதிப்பீட்டை கால் பகுதியாக அதாவது 8 பில்லியன் டாலராக குறைத்தது.  பல ஆண்டுகளாக இந்தியாவில் நிதியளிப்பில் முன்னணியில் இருந்த ஜப்பான் முதலீட்டு நிறுவனமான  சாப்ட்பேங்க் (SoftBank) கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் ஒரு புதிய முதலீடு கூட செய்யவில்லை. தனது மதிப்பீட்டில் மேலும் திருத்தம் செய்ய காத்திருக்கிறது. 2021இல் சாப்ட்பேங்க் இந்திய நிறுவனங்களில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்ததாகவும், 2022இல் 500 மில்லியன் டாலர் அளவே முதலீடு செய்த நிலையில், நடப்பாண்டில் இன்னும் முதலீட்டை ஆரம்பிக்கவே இல்லை என ராய்ட்டர்ஸ் கணக்கீடுகள் காட்டுகின்றன.

அடிமேல் அடி வாங்கும் இந்தியா

இதே முதல் காலாண்டில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பொதுவான அளவில் இலக்கை எட்டியுள்ளன. ஆனால் வெளிநாட்டு மூலதனத்தை அதிகம் நம்பியுள்ள இந்திய ஸ்டார்ட்அப் துறை அடிமேல் அடி வாங்கி வருகிறது. அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 32.5 பில்லியன் டாலரும் (2.6 லட்சம் கோடி), சீன ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 5.6 பில்லியன் டாலரும் (ரூ.46,000 கோடி) நடப்பு காலாண்டில் நிதி திரட்டியுள்ளன.

மோடி என்ன சொல்லப்போகிறார்? 

பிரதமர் மோடி அடிக்கடி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை “புதிய இந்தியாவின் முதுகெலும்பு” என பாஜக அரசின் சாதனை போல கூவிக்கொண்டே இருப்பார். ஆனால் தற்போதைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வீழ்ச்சியைப் பற்றி என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- தமிழில் சுருக்கம் ; எம்.சதீஸ்குமார்
ஆதாரம் : எம்.ஸ்ரீராம் (ராய்ட்டர்ஸ்)