புதுதில்லி, ஜூலை 8 - இந்துத்துவா கூட்டத்தின் எதிர்ப்புக்கு அஞ்சி, டுவிட்டர் நிறுவனம் தனது ‘காளி’ படத்தின் போஸ்டரை நீக்கியிருப்பதற்கு எதிராக லீனா மணிமேகலை ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். “காளி மரணத்தின் தெய்வம்; காளியை அழிக்க முடியாது” என்றும், “இந்துத்துவா ஒரு போதும் இந்தியாவாக முடியாது” என்றும் அவர் கொந்தளித்துள்ளார். கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டவர் லீனா மணிமேகலை. ‘தேவதைகள்’, ‘பறை’, ‘பலிபீடம்’ ஆகிய ஆவணத் திரைப்படங்களையும், ‘செங்கடல்’, ‘மாடத்தி’ ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ள லீனா மணிமேகலை, தற்போது கனடா நாட்டின் டொராண்டோ நகரில் வசித்து வருகிறார்.
“மோடி இந்த நாட்டின் பிரதமராக வந்தால், எனது ரேசன் கார்டு, பாஸ்போர்ட், பான் கார்டு என அனைத்து ஆவணங்களையும் அரசிடம் ஒப்படைத்து விடுவேன். ஏன் எனக்கு இந்திய குடியுரிமையும் வேண்டாம் என்று சொல்லி விடுவேன். இது சத்தியம்!” என்று லீனா மணிமேகலை கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி டுவிட்டரில் பதிவிட்டிரு ந்தார். அதன்படியே 8 ஆண்டுகளாக அவர் டொராண்டோவில் தங்கியிருக்கிறார். இதனிடையே ‘காளி’ என்ற பெயரில் தனது புதிய ஆவணப்படத்தை இயக்கி முடித்துள்ள லீனா மணிமேகலை, அதன் போஸ்டரை, டொரோண்டோ நகரிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி வெளியிட்டார். காளி வேடமணிந்த பெண்ணின் கையில் சிகரெட் இருப்பது போலவும், மற்றொரு கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் எல்ஜிபிடி (LGBTQ+) எனப்படும் பாலின புதுமையர் சமூகத்தை அடையாளப்படுத்தும் ‘வானவில்’ கொடி இருப்பது போலவும் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இது சமூகவலைதளங்களில் வெளி யான நிலையில், அதற்கு இந்துத்துவா அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி யது. “லீனா மணிமேகலையைக் கைது செய்!” (#ArrestLeenaManimekalai) என்ற ஹேஷ்டேக்-கை டிரெண்ட் ஆக்கிய அவர்கள், ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த லீனா மணிமேகலை, “நான் பாலின புதுமையராகவும், திரைப்படங்களை இயக்கும் பெண்ணாக இருப்பதாலும் எனக்குள் இறங்கும் காளி, பால்புதுமையர் கொடியையும் கேமிராவையும் பிடித்திருக் கிறார். பூங்காவில் படுத்துறங்கும் கனடாவின் வீடற்ற ஏழைக் கறுப்பின உழைக்கும் மக்களி டம் காளியை உபசரிக்க, ஒரு சிகரெட்தான் இருக்கிறது. அதை அன்புடன் ஏற்றுக்கொள் கிறார் காளி” என தனது ஆவணப்படத்தின் கதைக் கருவை சுருக்கமாக விளக்கினார். “’காளி’ படத்தைப் பார்த்தால் ‘arrest leena manimekalai” என்ற ஹேஷ்டேக் போடாமல் “love you leena manimekalai” ஹேஷ்டேக் போடுவார்கள்” என்று சமாதானம் கூறிப் பார்த்தார்.
எனினும், லீனா மணிமேகலையின் ‘காளி’ பட போஸ்டர் மீது நடவடிக்கை எடுக்கு மாறு கனடா அரசுக்கு இந்திய தூதரகமே தலை யிட்டு கோரிக்கை வைத்தது. இந்தியாவிலும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் லீனா மணிமேகலை மீது அதிகபட்சமாக 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, “மேலும் எனக்கு இழப்ப தற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர்தான் என்றால் தரலாம்” என்று டுவிட்டரில் பதிவிட்டார்.
எனினும் எதிர்ப்பு நின்றபாடில்லை. லீனா மணிமேகலையின் ‘காளி’ பட போஸ்டருக்கு, ஆட்சேபணைகள் எழுந்ததால், அந்த போஸ்டரை டுவிட்டர் நிறுவனம் அதுவாகவே நீக்கியது. இது லீனா மணிமேகலையை தற்போது கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து, ‘தி டெலிகிராப்’ செய்தித் தளத்தில் வெளியாகியுள்ளதை மேற்கோள் காட்டியுள்ள லீனா மணிமேகலை, “இது (டுவிட்டரின் நட வடிக்கை) மிகவும் நகைப்புக்குரியது. இந்த லோ லைஃப் டிரோல்கள், ஆட்சேபனைக்குரிய தாகக் கருதும் அதே போஸ்டரை டுவீட் செய்து பரப்பினார்கள். அந்த வகையில், போஸ்டர் குறித்து வெறுப்பை கக்கிய 2 லட்சம் பய னர்களின் பதிவையும் டுவிட்டர் நிறுவனம் நீக்குமா? காளியை ஒருபோதும் தாக்க முடி யாது, காளியை பாலியல் வன்கொடுமை செய்ய முடியாது, காளியை அழிக்கவே முடியாது, அவள் மரணத்தின் கடவுள்” என்று ஆவேச மாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, லீனா மணிமேகலைக்கு மத்தியப் பிரதேச மாநிலம் போபால் காவல்துறை ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அறி வுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது.