வாஷிங்டன், ஜன.6- உலகின் மிகப்பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோ சாப்டின் அமெரிக்க அலுவலகம் ஒன்றில் முதன்முறையாக தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு தொழிற்சங்கங்கள் இல்லாத நிலைமைதான் பல்வேறு நாடுகளில் நிலவுகின்றன. அமெரிக்காவில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. வாக்கெடுப்பு நடத்தி, அதில் பெரும்பாலான தொழிலாளர்கள் ஒப்புதல் தெரிவித்தால்தான் தொழிற்சங்கம் அமைக்க முடியும். பெரும்பான்மை கிடைக்காமல் செய்யப் பல்வேறு உத்திகளை நிறுவனங்களின் நிர்வாகங்கள் கையாளுவது வழக்கமாகும். மைக்ரோசாப்ட், ஆக்டிவிஷன் பிளிஸ்ஸார்டு உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து தொழிற்சங்கம் வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக, ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை மேற்பார்வை பார்க்கும் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாகவே, அமெரிக்காவில் தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்துள்ளது. வெறும் பத்து விழுக்காடு தொழிலாளர்கள்தான் தொழிற்சங்கங்களில் இதுவரையில் இணைந்துள்ளனர்.
ஆக்டிவிஷன் நிறுவனத்தில் பணியாற்றும் தரக்கட்டுப்பாடு ஊழியர்கள் தொழிற்சங்கத்தை அமைக்க முனைந்துபோது, நிறுவனம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக்கட்டை போடப் பார்த்தனர். அதையும் மீறி அந்நிறுவனத்தின் இரண்டு இடங்களில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. இதேபோன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் முயற்சித்தபோது, அத்தகைய முயற்சிகளைத் தடுக்க மாட்டோம் என்று நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர். மைக்ரோசாப்ட்டின் ஜெனிமேக்ஸ் ஸ்டுடியோவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 300 தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று வாக்களித்தனர். இந்தத் தேர்தலையும், அதன் முடிவையும் அங்கீகரிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜெனிமேக்ஸ் நிறுவனத்தில் கூட்டுப்பேர உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் பிரதிநிதியாகப் பங்கேற்க அமெரிக்கத் தகவல்தொடர்பு ஊழியர்கள் சங்கத்தை அங்கீகரிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.
ஊதியம்-பணியிடச் சூழல் தொழிற்சங்கம் தேவை என்பதற்கு ஆதரவாக வாக்களித்த ஜக்காரி ஆர்ம்ஸ்டிராங் என்ற ஊழியர், ‘‘கூடுதல் ஊதியம் மற்றும் மேம்பட்ட பணியிடச் சூழல் ஆகிய கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது’’ என்று தொழிற்சங்கம் அமைப்பதற்கான காரணத்தைக் கூறினார். ஜெனிமேக்ஸ் நிறுவனத்தை 2021-ஆம் ஆண்டில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே தொழிற்சங்கம் அமைப்பதற்கான பணியில் தொழிலாளர்கள் இறங்கியிருந்தனர். அடுத்த கட்டமாகப் பேச்சுவார்த்தைக்குச் செல்லவிருக்கிறோம் என்று கூறியுள்ள தொழிற்சங்கம், ‘‘திடீர் சரிவு, நியாயமற்ற ஊதியம் மற்றும் வளர்ச்சியடைய வாய்ப்புகள் குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளை நிறுவனத்துடன் பேசப் போகிறோம். சொல்லப்போனால், நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் முறையான தகவல் தொடர்பை ஏற்படுத்துவதே முன்னுரிமைப் பணியாகும்’’ என்று கூறியுள்ளது. மைக்ரோசாப்ட்டில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது மற்றும் அங்கீகாரம் கிடைத்தது ஆகியவை தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று கோரி வரும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.