கேரளத்தில் விவசாயிகள் பிரச்சாரப் பயணம் தொடக்கம்
மோடி அரசு வனவிலங்கு அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் ; வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் ; விவசாயத்தையும், மனித உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கேரள விவசாயிகள் சங்கம் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான விவசாயிகள் பேரணியை தொடங்கியுள்ளது. மே 22ஆம் தேதி அன்று கேரளாவின் வடக்கு முனையான காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிக்கானத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன், அகில இந்திய துணைத் தலைவர் இ.பி.ஜெயராஜன் பேரணியைத் தொடங்கி வைத்தனர். 8 நாட்கள் கேரளா முழுவதும் பயணம் செய்து மே 29ஆம் தேதி பேரணி திருவனந்தபுரத்தை அடையும். அதன்பிறகு மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் வனத்துறை தலைமை அலுவலகம் முன் பகல் மற்றும் இரவு நேர முற்றுகைப் போராட்டத்தை நடத்துவார்கள் என கேரள விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.