அமைச்சர் வழங்கினார்
தருமபுரி, ஏப்.17- விளைநிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தால் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக குழாய்கள் பதிக்க விளைநிலங்களில் கெயில் நிறுவன ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அளவீட்டு பணிகள் மேற்கொண்டனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (43) என்ற விவசாயி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், ஆவேசமடைந்த கனேசனின் உறவினர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன், சார் ஆட்சியர் சித்ரா விஜயன் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கனேசனின் குடுமத்திற்கு நிவாரணம் அளிப்பதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட விவசாயி சி.கணேசனின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தாருக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார். மேலும், அவரது குடுமபத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.என்.பி.இன்பசேகரன், தடங்கம் பி.சுப்பிரமணி, பென்னாகரம் வட்டாட்சியர் அசோக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.சின்னசாமி, சக்திவேல் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.