states

img

பணமதிப்பு நீக்கம் செல்லுமாம்!

ரிசர்வ் வங்கி, நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டு அரசு முடிவெடுக்க முடியாது

பணமதிப்பு நீக்கம் சட்டவிரோதம்!

தனியாக வழங்கிய தீர்ப்பில் நீதிபதி பி.வி. நாகரத்னா அதிரடி

புதுதில்லி, ஜன. 2 - பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதி பி.வி. நாகரத்னா, அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது: பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவு என்பதால், இதில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உள்ளது என்ற நீதிபதி கவாயின் கருத்தி்ல் தமக்கு உடன்பாடு இல்லை. ஆர்பிஐ சட்டப்படி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்ய இயலும்.

ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த தரவுகளைப் பார்க்கும்போது, ‘ஒன்றிய அரசு விரும்பியபடி’ என்ற வார்த்தைகள் உள்ளன. இது ரிசர்வ் வங்கியின் சுயவிருப்பம் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. பணமதிப்பு நீக்கத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வங்கிக்கு அனுப்பப்பட்ட நவம்பர் 7, 2016 தேதியிட்ட கடிதத்தின் மூலம் ஒன்றிய அரசிடமிருந்தே பணமதிப்பு நீக்கம் என்ற முன்மொழிவு உருவாகியுள்ளது. எனவே, ஒன்றிய அரசிடமிருந்து வரும் முன்மொழிவு, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய முன்மொழிவுக்கு நிகரானது அல்ல. அத்தகைய முன்மொழிவுக்கு ரிசர்வ் வங்கி அளித்த ஒப்புதலை ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 26(2)-இன் கீழ் ‘பரிந்துரை’ என்று கருத முடியாது. ஒருவேளை அவ்வாறு பரிந்துரைக்க, ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அத்தகைய பரிந்துரை செல்லாது, ஏனெனில் பிரிவு 26(2)-ஆனது, ஒரு குறிப்பிட்ட தொடர் கொண்ட ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம் செய்வதற்கு மட்டுமே அதிகாரம் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக அனைத்துத் தொடர் (Serial) ரூபாய் நோட்டுகளையும் மதிப்பு நீக்கம் செய்வதற்கு  இந்த விதி பொருந்தாது. ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 26(2) இல் உள்ள ‘எந்தத் தொடர்’ என்ற சொல்லுக்கு ‘அனைத்து தொடர்கள்’ என பொருள் கொள்ள முடியாது. 

வங்கியால் குறிப்பிட்ட தொடர் ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பு நீக்கம் செய்யப்படும் நடவடிக்கையைக் காட்டிலும், ஒன்றிய அரசே அனைத்து தொடர் ரூபாய் நோட்டுகளையும் பணமதிப்பு நீக்கம் செய்வது மிகவும் தீவிரமான பிரச்சனையாகும். எனவே, இதுபோன்ற பணமதிப்பு நீக்கம், நிர்வாக அறிவிப்பை விடவும் சட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில், ஜனநாயகத்தின் மையமாக விளங்கும் நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியே பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியம் காக்கப்பட வேண்டும் என்றால் அவசரச் சட்டம் மூலம் கொண்டு வந்திருக்கலாம். பணமதிப்பு நீக்கம் நல்ல நோக்கத்திற்காக மேற்கொள் ளப்பட்டது; கறுப்புப் பணம், பயங்கர வாதத்திற்குச் செல்லும் நிதி மற்றும் கள்ளநோட்டு போன்றவற்றை ஒழிப் பதற்காக  திட்டமிடப்பட்டது என்றாலும் இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு விரோதமானது. இவ்வாறு நீதிபதி பி.வி. நாகரத்னா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பி.வி. நாகரத்னா 2027-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் வாய்ப்பைப் பெறுபவர் என்பது குறிப் பிடத்தக்கது. கர்நாடகத்தைச் சேர்ந்த இவரது தந்தை வெங்கடராமையாவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு

புதுதில்லி, ஜன. 2 - 2016-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்திய பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் திங்களன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஒன்றிய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் எந்தத் தவறும் இல்லை என்று 4 நீதிபதிகள் பெரும்பான்மையாக ஒரு தீர்ப்பை யும், நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும், பெரும்பான்மைத் தீர்ப்பிற்கு மாறு பட்டு ‘பணமதிப்பு நீக்கம் சட்ட விரோதமானது’ என்று மற்றொரு தீர்ப்பையும் வழங்கியுள்ளனர்.

கருப்பு நாள்

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு, திடீரென தொலைக் காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, அதுவரை புழக்கத் தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது  என்று தடாலடியாக அறிவித்தார். இத னால், கறுப்புப் பணம், பயங்கரவாதி களிடம் புழங்கும் கள்ளப் பணம்  ஒழிக்கப்படும். ரொக்கப் பணப்புழக் கம் குறைக்கப்படும் என்று விளக்க மளித்தார். ஆனால், மோடி அரசின் நட வடிக்கை நாட்டையே நிலை குலையச் செய்வதாக அமைந்தது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளிடம் கொடுத்து புதிய 1,000 மற்றும் 2,000  ரூபாய் தாள்களை பெறுவதற்காக மக்கள் மாதக்கணக்கில் வங்கி களுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். ஏராளமானோர் ஏடிஎம் வாசல்களில் கால்கடுக்க நின்றனர். அவர்களில் பலர் உயிரை விட்ட சோகமும் நிகழ்ந்தது. ஏழை எளிய  நடுத்தர மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானதுடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முடங்கிப் போயின. பல சிறுதொழில் நிறுவனங்கள் அழிந்தே போயின. கோடிக்கணக்கா னோர் வேலையை இழந்து நடுத் தெருவிற்கு வந்தனர்.'

58 வழக்குகள்

இதையடுத்து, ஒன்றிய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நட வடிக்கையை செல்லாது என்று  அறிவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத் தில் 58 வழக்குகள் தொடரப்பட்டன.  இந்த வழக்குகளை விசாரித்த அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், “மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் குறித்து கவலை தெரிவிக்கிறோம் என்றாலும் ஒன்றிய அரசின் பொருளா தார கொள்கையில் நீதிமன்றம் தலை யிட முடியாது” என்று கூறி விட்டார். அதேநேரம், பணமதிப்பு நீக்கத்தில் விதிமீறல்கள் உள்ளதாகவும், நிர்வாக உத்தரவு மூலம் கரன்சி நோட்டுக்களை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இல்லை என்றும் அரசியலமைப்பு சார்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்படுவதால், நாட்டின் உயர்நீதி மன்றங்களில் தொடரப்பட்டுள்ள 58 வழக்குகளையும் உச்சநீதிமன்றத் தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். எனினும் உடனடியாக விசாரணை நடைபெறவில்லை. 6 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, 2022-ஆம் ஆண்டில்தான் இந்த  வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர் தலைமையில், நீதிபதி கள் பி.ஆர். கவாய், ஏ.எஸ்.  போபண்ணா, வி. ராமசுப்பிரமணி யன், பி.வி. நாகரத்னா ஆகிய   5 நீதிபதி களைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த சில மாதங்களாக வழக்கை விசாரித்து வந்தது. 

ப.சிதம்பரம் வாதம்

விசாரணையின்போது மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், “ரூபாய் நோட்டுகளை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு அதி காரம் இல்லை. ஒரு குறிப்பிட்ட தொட ரின் (Serial) ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ய மட்டுமே சட்டப் பிரிவு 26(2) ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது” என்று தெரிவித்தார். மேலும், “பணமதிப்பு நீக்கம் தொடர் பான முழு நடைமுறையும் சுமார்  26 மணி நேரத்தில் செய்யப்பட்ட தாக எனது கணக்கீடு காட்டுகிறது. கடிதம் நவம்பர் 7-ம் தேதி பிற்பக லுக்குப் பிறகு ரிசர்வ் வங்கிக்கு வருகிறது. அதன் பிறகு நவம்பர் 8-ம் தேதி தில்லிக்கு சந்திக்க வரு மாறு ரிசர்வ் வங்கி மத்தியவாரியத் திற்கு தொலைபேசியில் அழைப்பு தரப்பட்டுள்ளது. மாலை 5:30 மணிக்கு சந்திப்பு நடக்கிறது. ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்திற்குள், அங்குவந்த பரிந்துரை கள், அமைச்சரவைக்கு எடுத்துச் செல்லப்படு கின்றன. பின்னர், பிரதமர் இரவு 8 மணிக்கு  தொலைக்காட்சியில் தோன்றி பணமதிப்பு நீக்கத்தை அறிவிக்கிறார். இது மிகவும் மூர்க்கத்தனமான முடிவெடுக்கும் செயல்முறையாகும். மேலும், இது சட்டத்தின் ஆட்சியை கேலி செய்கிறது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம்-  1934-இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இயக்குநர்களின் எண்ணிக்கை மற்றும் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளின் கீழ் இயக்குநர்களுக்கு முன் அறிவிப்பு கொடுப்பது தொடர்பான விதிகள் கடைபிடிக்கப்பட்டதா என்பதற்கான ஆவ ணங்கள் 6 ஆண்டுகளைக் கடந்தும் தாக்கல்  செய்யப்படவில்லை” என்றும் குற்றச்சாட்டுக் களை அடுக்கினார்.

மேலும், “ரிசர்வ் வங்கி மட்டுமே ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கு உரிமை கொண்டது. ஒன்றிய அரசு தன்னிச்சையாக இதைச் செய்ய முடியாது. ஆனால், சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் ஒன்றிய அரசு முற்றிலும் தவறான முடிவை எடுத்துள்ளது. இதனால் ஏற்படப்போகும், பாதிப்புகளை ஆராயவில்லை. அரசு அச்சகத்தால் மாதத்துக்கு ரூ. 300 கோடி ரொக்கம் மட்டுமே அச்சடிக்க முடியும் என்ற நிலையில், அதனைக் கருத்தில் கொள்ளாமல் ஒரே இரவில், ரூ. 2,300 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மதிப்பு நீக்கம் செய்யப் பட்டது. 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க  21 லட்சத்து 25 ஆயிரம் ஏடிஎம்-கள் மாற்றி யமைக்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வள வுக்குப் பிறகும், 2016-17 ஆண்டு அறிக்கையில் வெறும் ரூ. 43 கோடிக்கே கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. அப்படியானால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் குறிக்கோள் எங்கே நிறைவேறியிருக்கிறது? பயங்கரவாதிகளுக்கு கள்ள நோட்டுகள் வழங்கப்படுவதாக கூறப்படு வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் புதிய 2,000  ரூபாய் நோட்டுகளே இருந்துள்ளன. மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 99.3 சதவிகித பணம் திரும்பி  வந்துவிட்டதாக ரிசா்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1000, ரூ. 500 நோட்டுகள் செல்லுபடியாகும் பணமாக மாற்றப்பட்டுவிட்டது என்பதே இந்த முழு நடவடிக்கையின் இறுதி முடிவாகும். ஆனால்,  இந்த நடவடிக்கையால் நூற்றுக்கணக்கானோர் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கின்றனர். எனவே, பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை முற்றிலும் தவறான முடிவு என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று ப. சிதம்பரம் கூறினார்.

பணமதிப்பு நீக்கம் நடந்து 6 ஆண்டு களுக்குப் பிறகு, அதனை செல்லாது என அறிவிப்ப தால் இழப்புகள் சரிசெய்யப்பட்டு விடுமா? என்று  நீதிபதிகள் குறுக்கிட்டபோது, “அது சரிசெய்யப் படாதுதான்; ஆனால், வருங்காலத்தில் இது போன்ற தவறான நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபடாது” என்று ப. சிதம்பரம் பதிலளித்தார். நீதிமன்றம் தலையிட முடியாதா? ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, “நாட்டின் நலன் கருதியும், பாதுகாப்பு கருதியுமே இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்தது. இதில் சட்டரீதியான அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன. இதனை செயல்படுத்துவதில் சில இடையூறு கள் இருந்தது உண்மைதான். ஆனால் அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. மக்களை பெரிதும் பாதிக்காத வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அனைத்துக்கும் மேலாக, இது ஒன்றிய அரசின்  பொருளாதாரக் கொள்கை. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு ஒன்றிய அரசு கொள்கை முடிவுகளை எடுக்க லாம். இதில் நீதிமன்றம் தலையிட விரும்ப வில்லை. அதே சமயத்தில், இந்த முடிவுகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகளில் நீதிமன்றங்களால் தலையிட முடியும். பொருளாதாரக் கொள்கைகள் எனக் கூறி எங்களை கட்டிப்போட முடியாது. அரசின் முடிவுகள் செயல்படுத்தப்படும் விதத்தை நாங்கள் கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என காட்டமாக குறிப்பிட்டனர்.

ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, “பண மதிப்பு நீக்கம் முடிந்துபோன விவகாரம். இதனை  விவாதிப்பதால் நிவாரணம் ஏதும் கிடைக்கப்  போவதில்லை. அப்படியிருக்க, இதில்  நீதிமன்றம் என்ன செய்ய முடியும்” என்ற  வாதத்தை வைத்தார். அப்போது, நீதிபதிகள் ‘பொருளாதார நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த விவகாரத்துக்குள் செல்ல வேண்டாம் என்கிறீர்கள். அப்படி யானால் ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு, ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 26  (2) மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் முன்வைக்கும் புகாருக்கு உங்களின்  பதில் என்ன? பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக வாதிடும் நீங்கள், இதை மேற்கொள்வதற்கான நெறி முறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை நீதி மன்றத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றனர். அதுதொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

‘பெரும்பான்மை’ நீதிபதிகளின் தீர்ப்பு

இறுதியாக அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குளிர்கால விடு முறை காரணமாக, நீதிபதிகள் ஜனவரி 2-ஆம் தேதிக்குத் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்த குளிர்கால விடுமுறை முடிந்து திங்களன்று நீதிமன்றம் கூடியது. அப்போது பணமதிப்பு நீக்க வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில், 5 நீதிபதிகள் இடம்பெற்றிருந்த நிலை யில், நீதிபதிகள் எஸ்.ஏ. நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகிய 4 நீதிபதிகள் பணமதிப்பு நீக்க நட வடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர்.  “ஒன்றிய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதார ரீதியிலான கொள்கை முடிவாகும். எனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெறுங்கள் என்று இப்போது உத்தரவு பிறப்பிக்க இய லாது. மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை யில் ஒன்றிய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை. ரிசர்வ்  வங்கியுடன் கலந்து பேசி உரிய முறையில்தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் ஒன்றிய அரசை குறைகூற முடியாது. ஒன்றிய அரசின் நடவடிக்கை உரிய முறையில் இருப்பதால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்த 58 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பணமதிப்பு நீக்க நட வடிக்கை செல்லும். ஒன்றிய அரசின் நடவடிக்கை ஏற்புடையது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இந்த நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேறியதா என்பதை நீதிமன்றம் விசாரிப்பது பொருத்தமானது அல்ல.

அரசின் நடவடிக்கைகள் எங்களுக்கு திருப்தி  தருகிறது. எனவே பணமதிப்பு நீக்க நட வடிக்கை விசயத்தில் எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படமாட்டாது. ஒன்றிய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏனோதானோ வென்று உடனடியாக திடீரென்று எடுக்க வில்லை. ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்து டன் சுமார் 6 மாதங்கள் ஒன்றிய அரசு ஆய்வு செய்திருக்கிறது. போதுமான ஆய்வுகளை செய்த பிறகுதான் ஒன்றிய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்து உள்ளது. காரணமே இல்லாமல் பண மதிப்பு நீக்கம் செய்துள்ளனர் என்று சொல்வதை ஏற்க இய லாது. எனவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை செல்லுபடியாகும்” என்று தீர்ப்பில் குறிப்பிட்டனர். அதேநேரம் அமர்வில் இடம்பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான பி.வி. நாகரத்னா, நான்கு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, ‘பணமதிப்பு நீக்கம் செல்லாது என்றும், அது சட்டவிரோதமானது என்றும் தனியாக ஒரு தீர்ப்பை வழங்கினார்.  எனினும் 4 பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்ற அடிப்படையில், ‘பணமதிப்பு நீக்கம் செல்லும்’ என்ற தீர்ப்பே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் இறுதித் தீர்ப்பாக வெளியாகி இருக்கிறது. தீர்ப்பை வாசித்த நீதிபதி பி.ஆர். கவாய், பணமதிப்பு நீக்க வழக்கில் மேலும் பல கேள்விகளுக்கு பதில் காணவேண்டியது உள்ளதால், விரிவான விசார ணைக்காக வழக்கை கூடுதல் நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு அனுப்ப பரிந்துரைப்ப தாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.