states

நச்சுக் கருத்துக்களை வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்தும் தமிழக ஆளுநர்

புதுதில்லி, நவ.1- படுபிற்போக்குத்தனமான, நச்சு சிந்தனைகளை வெளியிட்டு தேவையற்ற குழப்பங்களையும், பிரச்சனைகளையும் தமிழக ஆளுநர் உருவாக்கிக் கொண்டிருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அக்டோபர் 29-31 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையை வெளியிட்டு, சீத்தாராம் யெச்சூரி நிருபர்களிடையே பேட்டி அளித்தார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கேரள ஆளுநருக்கு கண்டனம்

இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்வதற்காக ஆளும் பாஜகவின் அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் கேரள ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கடுமையாகக் கண்டிக்கிறது. கேரளாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ள விதமும், பின்னர் நிதி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டிருப்பதும் அரசமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவாலும் அனுமதிக்கப்பட்டவை அல்ல.

மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற முறையில், மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்கலைக் கழகச் சட்டங்களால் அவ்வாறு  அவர் நடந்துகொள்வதற்கு எவ்வித அதிகாரமும் அளிக்கப்படவில்லை. ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும், கேரளாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் அறிவியல்பூர்வமான உயர்கல்வி அமைப்புமுறையை, தங்களுடைய இந்துத்துவா சித்தாந்தத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான முயற்சிகளேயாகும். ஒன்றிய  பாஜக அரசாங்கம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகம் மற்றும் பல மத்தியப் பல்கலைக் கழகங்களை இதேபோன்று குறி வைத்து, நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஒருதலைப்பட்சமான ஆளுநரின் நடவடிக்கைகளையும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்திடுவதற்காக இவர்கள் மேற்கொள்ளும் இழி முயற்சிகளையும் கேரள மக்கள் ஒன்றுபட்டு நின்று முறியடித்திடுவார்கள்.   தமிழக ஆளுநரின் அராஜகம் தமிழ்நாடு ஆளுநர் பாஜக-வின் கருத்துக்களை பிரதிபலிப்பதாகவும், அதன்மூலம் தேவையற்ற குழப்பங்களையும் பிரச்சனைகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்றும் ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். படுபிற்போக்குத்தனமான மற்றும் நச்சுச் சிந்தனைகளை ஓர் ஆளுநர் வெளியிடுவது அரசமைப்புச்சட்டத்தை மீறும் செயலாகும்.

ஆளுநர்களின் இத்தகைய ஜனநாயக விரோத, அரசமைப்புச்சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராக பாஜக அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் அனைத்தும், குறிப்பாக மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசாங்கங்களின் கட்சிகள் அனைத்தும், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

கூட்டாட்சி அமைப்புமுறைக்கு ஆபத்து 

நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சமாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்தையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் உரிமைகளையும் அரித்துவீழ்த்திட,  ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.  சட்டம், ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலில் உள்ளதாகும். பிரதமர் மோடி, “காவல்துறையினருக்கு ஒரே நாடு, ஒரே சீருடை” என்று கூறியிருப்பது, இதனை மீறும் செயலாகும்.   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் தொடர்வதை, தெலுங்கானாவில் உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்எல்ஏ-க்களை மிகப் பெரிய அளவிற்கு பண ஆசை காட்டி வேட்டையாட மேற்கொண்டிருக்கும் முயற்சிகளிலிருந்து பார்க்க முடிகிறது.