புதுதில்லி, ஜூலை 8 - மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக உ.பி. மாநிலம் சீதாபூர் காவல்துறையினர் தொடர்ந்த வழக்கில் ‘ஆல்ட் நியூஸ்’ இணைய தளத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜூபைருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கு தொடர்பாக டுவிட்டரில் புதிதாக எந்தக் கருத்துக்களையும் பதிவிடக் கூடாது; உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் நீதிமன்ற எல்லைப் பகுதியை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அந்த நிபந்தனையில் குறிப்பிட்டுள்ளது. வலதுசாரிகள் பரப்பிவிடும் போலிச் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் ஊடகமாக ‘ஆல்ட் நியூஸ்’ இணையதளம் இருந்து வருகிறது. இதனால் ‘ஆல்ட் நியூஸ்’ இணைய தளம் மீதும், அதன் இணை நிறுவனர் முகம்மது ஜூபைர் மீதும் நீண்டகாலமாகவே பாஜக மற்றும் வலதுசாரிகள் ஆத்திரம் கொண்டிருந்தனர். இதனிடையே, 2020-ஆம் ஆண்டு இந்துச் சாமியார்கள் மாநாட்டில், யதி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி, ஆனந்த் ஸ்வரூப் ஆகியோர், ‘முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்’ என பேசியதை மேற்கோள் காட்டி “வெறுக்கத் தக்கவர்கள்” என முகம்மது ஜூபைர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையே காரணமாக வைத்து, உ.பி. பாஜக அரசின் காவல் துறை ஜூபைர் மீது வழக்கு பதிவு செய்தது. அவரை கைது செய்யவும் முயன்றது. ஆனால், ஜூபைர் முன் ஜாமீன் பெற்றார்.
இதனிடையே 2020-ஆம் ஆண்டு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று முகம்மது ஜூபைரை தில்லி காவல்துறை கடந்த ஜூன் 27-ஆம் தேதி தில்லிக்கு வர வழைத்து, அங்கு அவரிடம் நாள் முழுவதும் விசாரணை நடத்திய நிலையில், இரவு திடீ ரென அவரைக் கைது செய்தது. “2018-ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளை வேண்டுமென்றே அவ மதிக்கும் நோக்கத்துடன் முகம்மது ஜூபைர் ஒரு சந்தேகத்திற்குரிய படத்தை டுவீட் செய்த தாக டுவிட்டர் நிறுவனத்திடம் இருந்து புகாரைப் பெற்றதாகவும், அந்த புகாரின் பேரிலேயே வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தில்லி உளவுத்துறை டிசிபி கேபிஎஸ் மல்ஹோத்ரா கூறினார். தில்லி திகார் சிறையிலும் ஜூபைர் அடைக்கப்பட்டார். இதற்கு இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் (Editors Guild of India), இந்திய பத்திரிகையாளர் சங்கம் (Press Club of India), ‘ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு’ (Committee to Protect Journalists - CPJ) என்ற சர்வதேச ஊடக நிறுவனம், ஐக்கிய நாடு கள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பத்திரிகையாள ரும், சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ஆம்னெஸ்டி இந்தியா’ நிறுவனத்தின் தலைவருமான ஆகார் படேல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் தனது பழிவாங்கும் நட வடிக்கையை பாஜக ஆட்சியாளர்கள் கைவிடுவதாக இல்லை.
மத உணர்வைப் புண்படுத்தியதாக ஜூபைர் மீது ஜூலை 1-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்தில் புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 4-ஆம் தேதி திகார் சிறையில் இருந்து ஜூபைர் சீதாபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், முகம்மது ஜூபைர் தன்மீது சீதாபூர் மாவட்டத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதி மன்றத்தை நாடினார். அங்கு ஜூபைருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
அவரது மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே. மகேஸ்வரி அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை யன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூபைருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ‘மின்னணு ஆதாரங்களை முகமது ஜூபைர் சேதப்படுத்தக் கூடாது; இந்த வழக்கு தொடர்பாக புதிய கருத்துகளை பதிவிடக் கூடாது. சீதாபூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்ற நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும், இந்த ஜாமீன் உத்தரவு தில்லி போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு பொருந்தாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், சீதாபூர் வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதும், தில்லி காவல்துறை பதிவு செய்த வழக்கில் ஜூபைர் தொடர்ந்து சிறையிலேயே இருக்கும் நிலை உள்ளது.