states

img

இந்தி ஒருபோதும் தேசியமொழி ஆக முடியாது!

சமூக வலைதளங்களில் மீண்டும் சூடுபிடித்த விவாதம்

பெங்களூரு, ஏப். 28 - “இந்திதான் இந்தியாவின் தேசியமொழி” என்று கூறிய பிரபல பாலிவுட் நடிகர் அஜய் கானுக்கு, கர்நாடக திரையுலகினரும், அரசியல்  கட்சியினரும் கடும் பதிலடி கொடுத்துள்ளனர். “இந்தி ஒருபோதும் தேசிய மொழியாக இருக்காது. அதிக மக்கள் பேசுவதாலே இந்தி  தேசியமொழி ஆகாது” என்று அவர்கள் கூறி யுள்ளனர்.  ‘விக்ரம் ராணா’ பட புரோமோஷன் விழாவில்  கன்னட நடிகர் கிச்சா சுதீப் கலந்து கொண்டு  பேசினார். அப்போது, கன்னட திரைப்படமான கேஜிஎப்-2 மாபெரும் வெற்றி பெற்றது குறித்துப்  பேசிய அவர், “இந்த கன்னட திரைப்படம்,  இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தாலேயே, இந்தியா முழுமைக்குமாக எடுக்கப் பட்ட படம் என அனைவரும் சொல்கிறார்கள். ஒரு சிறிய திருத்தம். இந்தி ஒன்றும் தேசிய மொழி அல்ல. பாலிவுட் படங்கள் பல தமிழ்,  தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப் படுகின்றன. ஆனால், இந்தியில் பெறும் வெற்றி யை அந்த திரைப்படங்கள் தென்னிந்தியாவில் பெற முடியாமல் திணறுகின்றன. ஆனால், தென்னிந்தியாவில் நாங்கள் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்து இடங்களில் நல்ல  வெற்றியை பெறுகின்றன” என்று கூறி யிருந்தார்.

இதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் டுவிட்டரில், இந்தி மொழியிலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். “சகோதரர் கிச்சா சுதீப்... இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார். இதற்கு கிச்சா சதீப், “என்னுடைய பேச்சின்  பொருள் தவறாக உங்களுக்கு வந்து சேர்ந்தி ருக்கும் என நினைக்கிறேன் சார். நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படி சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். புண்படுத்த வேண்டும் என்றோ விவாதம் செய்ய வேண்டும் என்றோ நான் அப்படி சொல்லவில்லை” என்றார்.  இதற்குப் பதிலளித்த சுதீப், “நீங்கள் இந்தி யில் அனுப்பிய பதில் எனக்கு புரிந்தது. ஏனெனில்  நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டி ருக்கிறோம். ஆனால் என்னுடைய இந்த பதிலை ஒருவேளை நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அதை உங்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?” என்று பதிலடி கொடுத்தார். 

அஜய் தேவ்கான், கிச்சா சுதீப்பிற்கு இடை யிலான இந்த விவாதம் சமூக வலைதளங்களில் வைரலானது. சுதீப் சொல்வதே சரி, இந்தி ஒருபோதும் தேசியமொழி ஆக முடியாது என்று  பலரும் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர். “இந்தியாவில் தேசிய மொழி என ஒன்று கிடையாது. ஆட்சி மொழிகளாக பட்டிய லிடப்பட்டிருக்கும் 22 மொழிகளில் ஒன்றுதான் இந்தி. தவறான தகவலை பதிவு செய்ததற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும், “ஒரு மொழியில் பிற மொழி படங்கள் டப் செய்யப்படுவதால் அது தேசிய மொழியாக மாறிவிடுமா? உங்கள் பொது அறிவு அபாரம்” என்றும் அஜய் தேவ்கானை கடுமையாக சாடினார். “மற்ற மொழி திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்படுவதுதான் உங்கள் பிரச்சனையா? அப்படியென்றால், இனி இந்தி படங்களை வேறு  மொழிகளில் டப் செய்யப்படுவதை நிறுத்திவிடுங் கள்” என்றும் காட்டமாக கருத்துக்களைப் பதிவிட்டனர்.

கர்நாடக அரசியல் தலைவர்களும் அஜய் தேவ்கானுக்கு எதிராக களத்தில் இறங்கினர். “இந்தி ஒருபோதும் நமது தேசிய மொழி யாக இருக்காது. நம் நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை மதிப்பது என்பது இந்தியர்கள் ஒவ்வொருவரின் கடமை. ஒவ்வொரு மொழி குறித்தும் அதன் சொந்த மக்கள் பெருமைப்படக்கூடிய வரலாறு இங்கு உண்டு. கன்னடனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்’’ என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவரு மான சித்தராமையா கூற,  “நடிகர் கிச்சா சுதீப் இந்தி தேசியமொழி அல்ல என கூறியிருப்பது சரியானது. அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலை யாளம், மராத்தி ஆகிய மொழிகளைப் போல் இந்தியும் ஒரு மொழிதான்” என்று கர்நாட கத்தின் மற்றொரு முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரு மான எச்.டி. குமாரசாமியும் சேர்ந்துகொண்டார். “இந்தியா என்பது பல மொழிகள் நிறைந்த தோட்டம். இங்கு பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன. இதற்கு இடையூறு செய்ய முயற்சி க்கக் கூடாது. அதிகளவில் மக்கள் பேசுவதால் மட்டுமே இந்தியை தேசிய மொழி என கூறி விட முடியாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல மாநிலங்கள் இந்தியை 2வது மொழி யாக வைத்துள்ளன. அப்படி இருக்கும்போது அது எப்படி தேசிய மொழியாக இருக்க முடியும். துவக்கம் முதலே இந்தி அடிப்படையிலான அரசியல் கட்சிகள் பிராந்திய மொழிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் முன்னெடுத்த செயலை தற்போது பாஜக தொடர்கிறது. இதனால் அஜய் தேவ் கனை ஒரே தேசம், ஒரே வரி, ஒரே மொழி எனும்  பாஜகவின் ஊதுகுழலாக தான் பார்க்க முடி கிறது’’ என்றும் குமாரசாமி கடுமையாக சாடி யுள்ளார். அஜய் தேவ்கானைக் கண்டித்து, கர்நாடக ரக்ஷண வேதிகே என்ற கன்னட அமைப்பினர் பெங்களூருவிலுள்ள மைசூரு வங்கி சர்க்கிள் முன்பு போராட்டமும் நடத்தியுள்ளனர்.