பெங்களூரு, ஜன. 4 - சாலை, சாக்கடை வசதி போன்ற ‘சிறிய பிரச்சனை’களை விட்டுவிட்டு, ‘லவ் ஜிகாத்’ பிரச்சனைக்கே மக்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியுள்ளார். கர்நாடகத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள், முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி நடத்தி வருகின்றனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த டிசம்பர் 31 அன்று, பெங்களூருவில் பேசும்போது, “2023 சட்டமன்றத் தேர்தல் கர்நாடக மக்களுக்கும், அயோத்தி, பத்ரிநாத் போன்ற இந்து வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியவர்களுக்கும், திப்பு சுல்தானை மகிமைப்படுத்து பவர்களுக்கும் இடையேயான போட்டி யாகும்” என்று மதவெறி நெருப்பைப் பற்ற வைத்தார். இதனிடையே, வருகின்ற தேர்தலில் “சாலை, சாக்கடை போன்ற சிறிய பிரச்சனைகளை விட்டுவிட்டு, “லவ் ஜிகாத்” பிரச்சனைக்கே கர்நாடக மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்”
கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார். “பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தி யாவை (பிஎப்ஐ) தடை செய்த ஒன்றிய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். இது பல இந்து ஆர்வலர்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவியுள்ளது. இந்த சட்ட விரோத குழு பல கொலைகளை செய்ய சதி செய்தும் உள்ளது. எனவே, சாலை கள், சாக்கடைகள், வடிகால் மற்றும் பிற சிறிய பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் அவர்களி டம் சொன்னேன். எனவே, உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை தொடர்பான பிரச்சனையான ‘லவ் ஜிகாத்’ நிறுத்தப்பட வேண்டும் என்றால், நமக்கு பாஜக (அரசாங்கம் அமைக்க) வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவரான நளின் குமார் கட்டீலின் பேச்சுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. “பாஜக தனது தோல்விகளையும், ஊழலையும் மறைக்கவே இந்த வகுப்புவாத கலவரத்தை பயன்படுத்துகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், “மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவை சிறிய பிரச்சனைகள்! வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டாம் என்று பாஜக தனது கட்சியினரைக் கேட்டுக்கொண்டது வெட்கக் கேடானது. அதை அக்கட்சி கொஞ்சம் கூட செய்யவில்லை” என்று பதிவிட்டுள்ளது.